தேனி, மார்ச் 17: நவதானியம் பயிரிடுவதால் மண்ணின் வளம் அதிகரிக்கும் என வேளாண் துறையினர் ஆலோசனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது: அங்கக முறையில் பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பயிர் சுழற்சி, ஊடுபயிர் மற்றும் நவதானியம் பயிரிடுதலின் மூலம் அளிப்பது மிகவும் முக்கியமானதாகும்.
ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் மண்வள மேம்பாட்டிற்கு பயிர் சுழற்சி மற்றும் ஊடுபயிர்கள் முக்கிய காரணிகளாக விளங்குகின்றன. பயிர் சுழற்சி என்பது ஒரு விவசாய நிலத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு விதமான பயிர்களை ஒரே நிலத்தில் தொடர்ந்து பயிரிடுவது ஆகும்.
முதன்மை பயிருக்கு இடையே வெவ்வேறு வகையான பயிர்களை ஊடுபயிராக பயிரிடும் போது, இவை வெவ்வேறு வேர் ஆழங்களை கொண்டிருப்பதால் மண்ணில் ஊட்டச்சத்துக்களின் சுழற்சிக்கும், பயிர் வளர்ச்சிக்கும் ஒன்றுக்கொன்று உதவி புரிகின்றன. இரண்டு முதன்மை பயிருக்கு இடைப்பட்ட காலத்தில் அல்லது கோடையின் இறுதியில், பல்வகை பயிர்களை விதைத்து பூக்கும் பருவத்தில் மடக்கி உழுவதால் மண்ணின் வளம் பெருகுவதோடு பயிர்களுக்கு ஊட்டச்சத்துக்கள் எளிதில் கிடைக்க வழிவகை செய்யும்.
