திருப்புத்தூர், மார்ச் 17: திருப்புத்தூர் பகுதி கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர். திருப்புத்தூர் பகுதிகளில் உள்ள 6 கோயில்களில் சமீபகாலமாக உண்டியலை உடைத்து திருட்டு நடைபெற்றது. இத்தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று நடந்த வாகன சோதனையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த கண்டரமாணிக்கம் அருகே வலையபட்டியை சோர்ந்த கார்த்திக் (29) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் திருப்புத்தூர் கருப்பர் கோயில், பூமாயி அம்மன் கோயில், மதகுபட்டி ஆகிய பகுதிகளில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து திருப்புத்தூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
