மதுரை, மார்ச் 16: மதுரை, தல்லாகுளம் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான நீச்சல்குளம் உள்ளது. இங்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் விடுமுறை நாட்களில் நீச்சலடிப்பது வழக்கம். இந்நிலையில் அவனியாபுரம் வைக்கம்பெரியார் நகரை சேர்ந்த பெரியசாமி மகன் கார்த்திக்ராஜா(22) மற்றும் இவரது நண்பர்கள் சந்தோஷ்(22), சதீஷ்(23) ஆகியோர் நீச்சல்குளத்திற்கு நேற்று மாலை டூவீலரில் வந்தனர். இவர்கள் கேட்டரிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தனர்.
இதில் கார்த்திக்ராஜாவுக்கு நீச்சல் தெரியாது எனக்கூறப்படுகிறது. இந்நிலையில் குளித்துக்கொண்டிருந்த போது கார்த்திக்ராஜா திடீரென குளத்திற்குள் மூழ்கியுள்ளார். அவரை நண்பர்கள் காப்பாற்றி இருசக்கர வாகனத்தில் ஏற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் சங்கர், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
