- Edapadi
- மாட்சிமை
- திமுகா
- பெங்களூர்
- மகிமை
- புரட்சிகர காவலர்களின் ஆலோசனை கூட்டம்
- சேலம்
- பிரதம செயலாளர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சேலத்தில் புரட்சி அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. பின்னர் கட்சியின் முதன்மைச் செயலாளர் பெங்களூரு புகழேந்தி அளித்த பேட்டி: தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி இல்லையென்றால், திராவிடக் கொள்கைகளே இல்லாமல் பாஜ செய்து விடும். வரவிருக்கும் தேர்தலில் திமுக கூட்டணிக்கும், என்.டி.ஏ கூட்டணிக்கும் இடையே தான் போட்டி. ஜெயலலிதா இருந்த காலத்தில், அதிமுக டெல்லியில் இருந்து தேர்தல் முடிவுகளை எடுக்கவில்லை. ஆனால், தற்போது எடப்பாடி தலைமையில் டெல்லி சென்று அனுமதி பெற்று வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் அதிமுக ஆட்சியில் இருந்த போது, கூட்டணியில் இருந்த தேமுதிக எதிர்க்கட்சியாக இருந்தது. அதேபோல் 2026 தேர்தல் முடிவுக்குப் பிறகு, திமுக கூட்டணியில் அதிக இடங்களை பெறும் காங்கிரஸ் கட்சியே எதிர்க்கட்சியாக இருக்கும். எடப்பாடி கையில் இருக்கும் அதிமுக, போட்டி என்ற லிஸ்டிலேயே கிடையாது. புரட்சி அண்ணா திமுகவை தொடங்கியதன் முக்கிய நோக்கம், எடப்பாடியை வீழ்த்தி அரசியலில் இருந்து அகற்றுவது தான். தமிழகத்தில் பாஜ நுழையக்கூடாது என்பதற்காக திமுக கூட்டணியை ஆதரிக்கிறோம்.
சிபிஐ விசாரணை தொடர்பாக நடிகர் விஜய் டெல்லி செல்வது, சுற்றுலா செல்வது போல உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜூனா பேசியது தவறானது. பாஜ எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் ரஜினிகாந்த் பாஜவுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுக்கவில்லை. அவரை யாராலும் மிரட்ட முடியாது. ரஜினி குறித்து தவறாக பேசிய ஆதவ் அர்ஜூனாவை நடிகர் விஜய் கண்டிக்க வேண்டும். விஜய் பாஜ-அதிமுக கூட்டணியில் சேர்ந்தாலும், திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். முதலமைச்சர் ஸ்டாலின் கூறியது போல, வரவிருக்கும் தேர்தல் தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்குமான போராக இருக்கும். பாஜவிற்கு அடிமையாக இருக்கும் எடப்பாடியை, தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
