×

புதுச்சேரிக்கும், தமிழ்நாட்டுக்கும் 30 ஆண்டுகளுக்கு பின் வேறு தேதியில் தேர்தல்

30 சட்டசபை தொகுதிகளை கொண்ட புதுச்சேரிக்கு முதல் சட்டமன்ற தேர்தல் 1964ம் ஆண்டு நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வெங்கடசுப்பாரெட்டியார் முதன்முறையாக முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். புதுச்சேரி, தமிழகமும் பூகோள ரீதியாக மிக நெருக்கமான பகுதியாக இருந்தாலும், ஒரே நேரத்தில் சுதந்திரம் அடையவில்லை. இதன்காரணமாக 1989ம் ஆண்டு வரை, தமிழகம் புதுச்சேரியில் வெவ்வேறு ஆண்டுகளில் பல்வேறு காலக்கட்டங்களில் தேர்தல்கள் நடந்துள்ளது.

1996ம் ஆண்டு முதல் கடந்த 2021 வரை தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஒரே தேதியில் தேர்தல் நடந்தது. மனுத்தாக்கல், தேர்தல்தேதி, வாக்கு எண்ணிக்கை ஆகிய ஒரே தேதிகளில் கடந்த காலங்களில் நடந்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்துக்கும், புதுச்சேரிக்கு, வேறு வேறு தேதியில் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. புதுச்சேரி, தமிழகத்துடன் மிக நெருங்கிய சூழலில் உள்ளதால் தேர்தல் நன்னடத்தை விதிகளை அமல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்களை ஏற்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

சில கிலோ மீட்டருக்குள் தமிழகப்பகுதியும், அதனை கடந்து சென்றால் புதுச்சேரி என நிலத்தகவமைப்பு பின்னிப் பிணைந்துள்ளது. ஏப்ரல் 9ம் தேதி புதுச்சேரிக்கும், ஏப்ரல் 23ம் தேதி தமிழகத்துக்கும் இரு வேறு தேதிகளில் தேர்தல் நடத்துவது. இரு மாநில எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு பெரும் சவாலாக இருக்கும் எனவும், தமிழகம், புதுவை மக்கள் எளிதான போக்குவரத்துக்கு தடை ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.

* சந்தேகம் கிளப்பும் மாஜி முதல்வர்
முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், ‘‘தமிழகம், புதுச்சேரிக்கு வெவ்வெறு தேதிகளில் தேர்தல் தேதிகளை அறிவித்திருப்பது புதிதாக உள்ளது. விரைவாக தேர்தலை நடத்துவது நல்லதுதான். இருப்பினும் பாஜ மற்றும் தேர்தல் ஆணையத்தின் நோக்கம் என்னவென்று தற்போது தெரியவில்லை. இருப்பினும் இது குறித்து சாதக, பாதக அம்சங்கள் ஆராயப்பட வேண்டும்.

கடந்த பல ஆண்டுகளாக தமிழகம், புதுச்சேரியில் ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடந்திருக்கிறது. தமிழகத்தின் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் புதுச்சேரிக்கு வெகு அருகாமையில் உள்ளது. இது என்னமாதிரியான விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என உடனடியாக தெரியவில்லை. தேர்தல் நேரத்தில் வெளிமாநிலத்தில் இருந்து பாஜ ஆட்களை இறக்க திட்டமிட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது’’ என்றார்.

* இன்று வேட்புமனுதாக்கல் தொகுதி முடிவாகாததால் கட்சிகள் கலக்கம்
புதுவை சட்டசபைக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேற்று அறிவித்தார். அதன்படி வேட்புமனு தாக்கல் இன்று(16ம் தேதி) துவங்குகிறது. வேட்புமனு பரிசீலனை 24ம் தேதியும், வாக்குப்பதிவு அடுத்த மாதம் 9ம் தேதியும் நடைபெறுகிறது. மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜ கூட்டணியில் கடந்த ஆண்டு போன்று தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கூட்டணியில் உள்ள அதிமுகவுக்கும், புதிதாக வந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் சார்லஸ் கட்சியான லஜகவுக்கும் எத்தனை தொகுதிகள் என்பது முடிவு ஆகவில்லை.

முதல்வர் ரங்கசாமி, லஜகவை கூட்டணியில் சேர்க்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அப்படியே கூட்டணி அமைந்தாலும் அவரது தொகுதியில் பிரசாரம் செய்ய மாட்டேன் எனவும் அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபோன்று திமுக, காங்கிரஸ் கூட்டணியிலும் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்படவில்லை. இன்று வேட்பு மனு தாக்கல் துவங்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளதால் அரசியல் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன.

* 14 நாள் தான் பிரசாரம்
புதுவையில் வேட்புமனு தாக்கல் இன்று துவங்கி வரும் 24ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. அதன்பிறகு தான் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும். பின்னர் தான் தேர்தல் பிரசாரம் நடைபெறும். அதாவது மார்ச் 25ம் தேதியில் இருந்து பிரசாரம் செய்ய கடைசி நாளான ஏப்ரல் 7ம் தேதி வரை தான் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்ய முடியும் என்பதால் வெறும் 14 நாட்கள் தான் இருக்கிறது. இந்த குறைந்த நாட்களில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Tags : Puducherry ,Tamil ,Nadu ,Venkata Subbarediyar ,Congress party ,Chief Minister ,Tamil Nadu ,
× RELATED யுஏஇயின் புஜைரா முனையத்திலிருந்து...