×

பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு இடமளிக்காமல் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும்: எஸ்டிபிஐ தேசிய துணை தலைவர் பேச்சு

 

சென்னை: பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு இடமளிக்காமல் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்துவது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு என்று எஸ்டிபிஐ கட்சி தேசிய துணை தலைவர் தெகலான் பாகவி கூறினார். எஸ்டிபிஐ கட்சியின் தென் சென்னை தெற்கு மாவட்டம் ஆலந்தூர் தொகுதி சார்பாக சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு எஸ்டிபிஐ தென் சென்னை தெற்கு மாவட்ட தலைவர் முகமது பிலால் தலைமை தாங்கினார். இப்தார் நிகழ்ச்சியில், அமைச்சர் தா.மோ.அன்பரசன், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் எஸ்டிபிஐ தேசிய துணை தலைவர் தெகலான் பாகவி மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், சமூக இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மதங்களை கடந்து சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் அரசியல் மற்றும் சமூகத்தின் பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி பேசுகையில், “நோன்பு என்பது வெறும் பசியைத் தாங்கிக் கொள்வது மட்டுமல்ல. அது சக மனிதனின் பசியை உணர்வதும் மனிதநேயத்தைப் பேணுவதுமாகும்.

இந்தியா போன்ற பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட நாட்டில், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே உண்மையான பலம். ஒருவரை ஒருவர் மதிப்பதும் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதுமே ஜனநாயகத்தின் அடிப்படை. பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு இடமளிக்காமல் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்துவது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு. வெறுப்பு அரசியலை அன்பாலும் ஒற்றுமையாலும் முறியடிக்க வேண்டும்” என்றார்.

Tags : STBI ,National Vice President ,Chennai ,STBI Party ,Degalan Bhakavi ,South Chennai South District Alandur ,
× RELATED புதுச்சேரியில் அனைத்து விதமான...