திருவள்ளூர்: தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிடும். தேர்தல் பணிக்கு உத்தர பிரதேசத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் சென்னை பெரம்பூருக்கு உதவி கமாண்டர் காரத்திகேயன் தலைமையில் 90 துணை ராணுவப் படையினர் திருவள்ளூருக்கு வருகை தந்தது. இதனைத்தொடர்ந்து துணை ராணுவப்படையினர், கனகவல்லிபுரம் காவல் பயிற்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு, திருவள்ளூரில் துணை ராணுவப் படையினர் கொடி அணி வகுப்பு மேற்கொண்டனர். மேலும், கடம்பத்தூர் ஒன்றியத்தில் பதற்றமான ஓட்டுச்சாவடியாக அறிவிக்கப்பட்ட பாப்பரம்பாக்கம் மற்றும் மணவாள நகரில் நேற்று முன்தினம் துணை ராணுவப் படையினர் அணிவகுப்பை மேற்கொண்டனர்.
இதனையடுத்து, நேற்று திருவள்ளூர் தாலுகா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட காக்களூர் எடைமேடை முதல் காக்களூர் தேர்தல் நடைபெறும் மையம் வரையும், திருப்பாச்சூர் கூட்டு சாலை முதல் திருப்பாச்சூர் பெட்ரோல் பங்க் வரையும் மாவட்ட கூடுதல் எஸ்பி கலியன், போலீஸ் டிஎஸ்பி தமிழரசி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திருவள்ளூர் தாலுகா விஜயகுமார், கடம்பத்தூர் பரந்தாமன், மப்பேடு சீத்தாபதி, சப்-இன்ஸ்பெக்டர் கோபி கிருஷ்ணன் முன்னிலையில் 20 போலீசாருடன், உதவி கமாண்டர் கார்த்திகேயன் தலைமையில் 90 துணை ராணுவ வீரர்கள் அணிவகுப்பு பேரணியில் ஈடுபட்டனர்.
