கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது

சென்னை: கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கவிஞர் வைரமுத்து இதுவரை 7 முறை சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதும் 6 முறை தமிழக அரசின் மாநில விருதும் வென்றுள்ளார். கவிதை தொகுப்புகள் மற்றும் நாவல்கள் உள்பட 37க்கும் மேற்பட்ட புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். அதில் அவர் எழுதிய ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ என்ற நாவலுக்கான 2003ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதை பெற்றுள்ளார். இவருக்கு 2014ம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று அவருக்கு இந்திய அரசின் மிக உயரிய விருதான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த வைரமுத்து, ‘‘இந்திய இலக்கியத்தின் நோபல் பரிசு என அழைக்கப்படும் ஞானபீட விருது பெறுவதில் மகிழ்ச்சி. தமிழ் கவிதைக்கு ஞானபீட விருது கிடைக்கவில்லை என்ற குறை என்னால் கழிந்தது. இனி புதிய பாய்ச்சலுடன் என் இலக்கிய பணி தொடரும்’’ என்று தெரிவித்துள்ளார். பாரதிய ஞானபீட ஆய்வு மற்றும் வரலாற்று அமைப்பு கடந்த 1944ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

இந்த அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய மொழிகளில் சிறந்த இலக்கியங்களை படைக்கும் எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது வழங்கப்படுகிறது. இந்த விருதின் கீழ் 11 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை, சரஸ்வதி வெண்கலச் சிலை மற்றும் பாராட்டு பத்திரம் ஆகியவை வழங்கப்படும். கடந்த 1965ம் ஆண்டில் கேரளாவை சேர்ந்த சங்கர குருப் என்பவருக்கு முதல் ஞான பீட விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 60வது ஞானபீட விருது வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த விருதை தமிழில் 1975ல் எழுத்தாளர் அகிலனும், 2002ல் ஜெயகாந்தனும் மட்டுமே பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வைரமுத்துவுக்கு கமல்ஹாசன் உள்பட திரையுலகை சேர்ந்த பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘நெடிய பரம்பரை கொண்ட தமிழ் இலக்கியத்துக்கு 3வது முறையாக உயரிய இலக்கிய விருதான ஞானபீடம் கிடைத்திருக்கிறது. ஜெயகாந்தன் பெற்ற முந்தைய ஞானபீடத்துக்கு பிறகு, கால் நூற்றாண்டு கடந்து தமிழுக்கு இந்த பெரும்பெருமையை சேர்த்திருக்கிறார் என் ஆப்தர் கவிப்பேரரசு வைரமுத்து. ‘வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்’ என்கிற கவி சொற்களோடு என் செவியில் விழுந்து இதயம் நுழைந்து நட்பில் கலந்த நண்பரை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

* முதல்வர் வாழ்த்து
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது கிடைத்ததற்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: தமிழைத் தன் கவித்திறத்தால் ஆளும் கவிப்பேரரசு வைரமுத்துக்கு ஞானபீட விருது!
காலையில்தான் கவிப்பேரரசை சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். சற்றுநேரத்தில் இந்த இனிய செய்தி வந்தடைந்து, அந்த சந்திப்பின் இனிமையை இன்னும் கூட்டியிருக்கிறது. தமிழில் இதுவரையில் அகிலனும், ஜெயகாந்தனும் மட்டுமே பெற்றிருந்த இவ்விருது, மரபுக் கவிதைகளிலும் நவீனத்திலும் விளையாடி, தமிழ் இலக்கிய உலகில் புதுமைகள் படைத்து ஆளும் நம் கவிப்பேரரசின் கைசேர்ந்து அவரையும் நம்மையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது.
கலைஞர் இருந்திருந்தால் கவிப்பேரரசை உச்சிமுகர்ந்து பாராட்டியிருப்பார். அவரிடத்தில் நான் நின்று கவிப்பேரரசு வைரமுத்துவை வாழ்த்துகிறேன். கவிப்பேரரசை தமிழ்நாடே வாழ்த்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: