சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக சென்னை விமானநிலையம் வந்தபோது ஆதவ் அர்ஜூனாவிடம் உயர்ரக மதுபாட்டில்கள் பறிமுதல்: விஜய்யிடம் கத்தரிக்கோல் சிக்கியது; விமானம் 40 நிமிடம் தாமதம்

சென்னை: கரூர் நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை டெல்லியில் உள்ள சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் பெயரில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் விசாரணையானது, டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் என்று அனைவரிடமும் சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது. அதோடு நடிகர் விஜய்க்கு இரண்டு முறை சம்மன் அனுப்பி, இரண்டு முறையும், விஜய் டெல்லிக்குச் சென்று விசாரணையில் ஆஜராகினார்.

இதனை அடுத்து மூன்றாவது முறையாக, இம்மாதம் கடந்த 10ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி, விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அன்று தவெக வேட்பாளர்கள் நேர்காணல் இருந்ததால் விஜய் தரப்பில் மற்றொரு நாள் ஆஜராவதற்கு அனுமதி கேட்கப்பட்டது. அதன்படி சிபிஐ நாளை (இன்று) காலை டெல்லியில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. அதன்படி டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் மூன்றாவது முறையாக விசாரணைக்கு ஆஜர் ஆவதற்காக, நடிகர் விஜய் நேற்று மாலை 3.30 மணிக்கு, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

அதற்கு முன்னதாக விஜய் 3.20 மணி அளவில், காரில் சென்னை பழைய விமான நிலையம் கேட் எண் 6க்கு வந்து, அவர் பயணம் செய்ய இருக்கும் தனி விமானத்தில் ஏறுவதற்காக அந்த விமானம் நிற்கும் பகுதிக்கு சென்றார். விஜய்யுடன் கட்சி நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், உதவியாளர் ஜெகதீஷ் உள்பட 7 பேர் அந்த விமானத்தில் செல்ல இருந்தனர். விஜய் மற்றும் அந்த விமானத்தில் பயணிக்க இருப்பவர்கள், தனி விமானத்தில் ஏறுவதற்கு முன்னதாக அவர்களுடைய உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது விஜய்யின் உடைமையை ஸ்கேன் மூலம் பரிசோதித்தபோது, அதில் ஏதோ ஆயுதம் இருப்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது.

இதனால் பரபரப்பு அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள், அந்த உடைமையை பரிசோதித்தனர். அதற்குள் சிறிய கத்தரிக்கோல் இருந்ததை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன்பின்பு அதுகுறித்து விசாரணை நடத்திய போது, அது சேவ் பண்ணும் போது மீசையை சரி செய்வதற்காக சேவிங் செட்டில் இருந்த கத்தரிக்கோல் என்று தெரியவந்தது. ஆனாலும் விமான பாதுகாப்பு சட்ட விதிகளின்படி, கத்தி, கத்தரிக்கோல் உள்பட கூர்மையான பொருட்களை விமான பயணி, தன்னுடைய கைப்பையில் எடுத்துச் செல்வது தவறு. எனவே அந்தப் பாதுகாப்பு சட்ட விதிகளின்படி கத்தரிக்கோலை மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேபோல ஆதவ் அர்ஜூனாவின் பேக்கை பரிசோதனை செய்தபோது, அதில் உயர்ரக வெளிநாட்டு மதுபானம் இருந்தது. அதையும் பறிமுதல் செய்தனர். அப்போது மதுபாட்டில், கத்தரிகோல் ஆகியவற்றை தங்களது உதவியாளர்களிடம் வழங்கும்படி விஜய் கேட்டுக் கொண்டார். இதனால் அவற்றை அவர்கள் வழங்கினர். அதன்பின்பு விஜய் உள்பட 7 பேரும், தனி விமானத்தில் ஏறுவதற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அனுமதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் விமானத்தில் ஏறிய பின்பு 4.04 மணிக்கு செல்ல வேண்டிய விமானம் 34 நிமிடம் தாமதமாக, சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றது. இதனால் சென்னை விமான நிலையத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

* மது ஒழிப்பு போராளி பையில் சரக்கு பாட்டில்!
தவெக சார்பில் மது ஒழிப்பு போராட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் ஆதவ் அர்ஜூனாவும் கலந்து கொண்டு பேசினார். இப்போது அவரது பையில் இருந்து உயர்ரக மதுபான பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விஜய்க்கு தெரிந்து இது நடந்ததா, இல்லையா என்பது தெரியவில்லை. மது ஒழிப்பு போராட்டம் நடத்தியவரே மதுவை கொண்டு சென்று பிடிபடுகிறார் என ஆதவ்வை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Related Stories: