×

கரும்பு கொள்முதல் விலை உயர்வு: சொன்னாரு..! செஞ்சாரு..!!

சொன்னாரு: திமுகவின் 2021ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கரும்பு கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார்.

செஞ்சாரு: தமிழகத்தின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அதில் மிக முக்கியமானது, கரும்பு விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான கரும்பு கொள்முதல் விலையை உயர்த்துவதாகும். முந்தைய காலங்களில் நிலவி வந்த விலை வீழ்ச்சி மற்றும் இடுபொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு இது ஒரு பெரும் நம்பிக்கையாக அமைந்தது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தின் இறுதியில் கரும்பு கொள்முதல் விலை ஒரு டன்னுக்கு ரூ.2,750 என இருந்தது.

அரசின் ஊக்கத்தொகையினால் தற்போது ரூ.3,500 வரை உயர்ந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் கொள்முதல் விலை 30 முதல் 35 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஊக்கத்தொகையை ஆலைகள் வழியாக வழங்காமல், விவசாயிகளின் வங்கித் கணக்கிற்கே நேரடியாகத் தமிழக அரசு செலுத்துகிறது. இது இடையில் ஏற்படும் கசிவுகளைத் தடுத்துள்ளது. மேலும், ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் விலைக்கு மேல், மாநில அரசு தனது சொந்த நிதியிலிருந்து கூடுதல் தொகையை வழங்கி வருகிறது. தமிழகத்திலேயே கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் தான் கரும்பு உற்பத்தியில் முதலிடம் வகிக்கின்றன. இங்குதான் அதிகப்படியான சர்க்கரை ஆலைகளும், பரந்த அளவிலான சாகுபடி நிலங்களும் உள்ளன. இங்குள்ள விவசாயிகளுக்கு அரசின் மூலம் உயர்த்தப்பட்ட கரும்பு கொள்முதல் விலை பெரிதும் உதவிகரமாக இருக்கிறது.

இம்மாவட்டங்களை தவிர ஈரோடு, கள்ளக்குறிச்சி, தருமபுரி, நாமக்கல், திருவண்ணாமலை, பெரம்பலூர், தஞ்சாவூர் மற்றும் ராணிப்பேட்டை விவசாயிகளும் பயனடைந்து வருகின்றன. மேலும், வரக்கூடிய சட்டமன்ற தேர்தலையொட்டி 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,‘‘கரும்பு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியின்படி, வரும் நிதியாண்டிற்குள் கொள்முதல் விலை ஒரு டன்னுக்கு ரூ.4,000 ஆக உயர்த்தப்படும்” என உறுதிபட தெரிவித்துள்ளார். அவ்வாறு திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்பட்சத்தில் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு கரும்பு விவசாயிகளின் பொற்காலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டுவாரியான நிதி ஒதுக்கீடு
* 2021-22: ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே, கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.150 ஊக்கத்தொகை வழங்க ரூ.150 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
* 2022-23: ஊக்கத்தொகை டன்னுக்கு ரூ.195 ஆக உயர்த்தப்பட்டது. இதற்காக சுமார் 1.2 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.253 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
* 2023-24: ஊக்கத்தொகை மேலும் அதிகரிக்கப்பட்டு டன்னுக்கு ரூ.215 ஆக வழங்கப்பட்டது. இதற்காக ரூ.247 கோடி நிதி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டது.
* 2024-25: தற்போதைய நிலையில், ஊக்கத்தொகையை டன்னுக்கு ரூ.349 ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு ரூ.297 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

* தலைவர்கள் இன்று…
முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை
எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்) சென்னை
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ் மாநில தலைவர்) சென்னை
வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்) மதுரை
நயினார் நாகேந்திரன் (பாஜ தலைவர்) சென்னை
பெ.சண்முகம் (சி.பி.எம்.மாநில செயலாளர்) காஞ்சிபுரம்
மு.வீரபாண்டியன் (சி.பி.ஐ.மாநில செயலாளர்) சென்னை
திருமாவளவன் (வி.சி.க தலைவர்) சென்னை
பிரேமலதா (தேமுதிக பொதுச்செயலாளர்) சென்னை
அன்புமணி (பாமக தலைவர்) சென்னை
ஜி.கே.வாசன்(தமாகா தலைவர்) சென்னை
சீமான்(நாதக ஒருங்கிணைப்பாளர்) சென்னை
டி.டி.வி.தினகரன்(அமமுக பொதுச்செயலாளர்) சென்னை
விஜய் (தவெக தலைவர்) டெல்லி

* மக்களை நம்பாதவர் மக்களை ஆள முடியாது’ நடிகர் ரவிமோகன் பஞ்ச்
தஞ்சாவூரில் நகை கடை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரவி மோகன் நேற்று வந்திருந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் மத்தியில் கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது ரவி மோகன், தனது படங்களில் நடித்த ஒரு சில அரசியல் வசனங்களை பேசி காண்பித்தார். அதில், ‘மக்களை நம்பாதவர் மக்களை ஆள முடியாது. நீ தொழிலுக்காக அரசியல் பண்றவன். நான் தொழிலே அரசியலா பண்றவன்’ என்று பஞ்ச் டயலாக் பேசியதை ரசிகர்கள் கைதட்டி ரசித்தனர். தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், தஞ்சாவூர் வந்தவுடன் ‘ராஜராஜ சோழன்’ என என்னை பொதுமக்கள் வரவேற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தது பெருமையாக உள்ளது. இன்று நான் தஞ்சை மண்ணிற்கு வந்திருக்கிறேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் வரவேண்டும் என தோன்றுகிறது என்றார்.

* தேஜவில் விஜய் சேர்ந்தா வெள்ளம் வந்துருமா…? சீமான் கல கல
திருச்சி விமான நிலையத்தில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அளித்த பேட்டி: சாதி அரசியலாக மாறினால் சமத்துவம் அழியும், மதம் அரசியலாக மாறினால் மனிதம் அழியும், பணம் அரசியலாக மாறினால் பண்பாடு மற்றும் ஒழுக்கம் அழியும். நல்ல ஒழுக்கம் கொண்ட சமூகத்தை உருவாக்க அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். அரசியலில் மாற்றம் வரவேண்டும் என நோக்கில் தான் அனைவரும் கட்சி தொடங்குகிறார்கள். சசிகலா அரசியலில் மாற்றம் வர வேண்டும் என்றுதான் கட்சி தொடங்கி உள்ளார். அவர் நல்லது செய்வார் என எதிர்பார்த்து வாழ்த்துகிறேன். மற்றவர்கள் அரசியலுக்கு வருவது எங்கள் கட்சியை பாதிக்காது.

காஸ் சிலிண்டர், எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தேர்தல் களத்திற்கு நாங்கள் இனி மிதி வண்டியில் சென்று தான் பிரசாரம் செய்ய நேரிடும். தேஜ கூட்டணியில் தவெக இணைந்தால் என்ன வெள்ள சேதம் வந்துவிடுமா, எங்களை நம்பி வாக்களிப்பவர்கள் இயற்கை விரும்பிகள். 2026 தேர்தல் இருமுனை போட்டி தான். ரூ.2,000 ஒரு பக்கம்… 2,500 ஒருபக்கம்…. மறுபக்கம் நல்ல கல்வி, போக்குவரத்து, மருத்துவம், வேலைவாய்ப்பு, நிம்மதியான வாழ்க்கை. இதுவே எங்கள் நோக்கம். நானும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.50,000 கொடுக்கலாம் என முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

* வெயிலில் காத்திருந்தவர்களை கண்டுகொள்ளாமல் விர்ர்ர்…
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் நாதக வேட்பாளராக சீமான் போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று தேவகோட்டைக்கு வந்த சீமான் பெரிய பள்ளிவாசலில் ஜமாத்தார்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். முன்னதாக, பிரசாரத்துக்கு வந்த சீமானை வரவேற்க காரைக்குடி நகர எல்லை பகுதியான ஆவுடையப்பொய்கையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்தனர். ஆனால் சீமான் கரை நிறுத்தாமல் விருட்டென வேகமாக சென்றுவிட்டார். இதனால் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

Tags : Sonnaru ,Sencharu ,DMK ,M.K. Stalin ,Tamil Nadu ,2021 assembly elections… ,
× RELATED நேர்வழியில் முடியாதுன்னு குறுக்குவழி...