புதுடெல்லி: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை போக்க ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குமாறு இந்தியாவை அமெரிக்கா தற்போது வலியுறுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் தொடங்கிய போது, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியாவிற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்த அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் அந்நாட்டிடம் வர்த்தகம் செய்யக்கூடாது என பல மாதங்களாக அழுத்தம் கொடுத்து வந்தது.
இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் சிக்கல்கள் நீடித்து வந்தன. இந்நிலையில், தற்போது ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் சூழல் உருவாகியுள்ள நிலையில், நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. குறிப்பாக, கடந்த 10ம் தேதியன்று வெள்ளை மாளிகை வெளியிட்ட தற்காலிக அறிவிப்பில், கடலில் தேங்கியுள்ள ரஷ்ய கச்சா எண்ணெயை இந்தியா போன்ற நாடுகள் தாராளமாக வாங்கிக்கொள்ள அனுமதி அளிப்பதாக தெரிவித்துள்ளது. ஈரான் உடனான மோதல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள விநியோக பாதிப்பை சரிசெய்யவும், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலருக்கு கீழ் குறையவும் இந்த முடிவை அமெரிக்கா எடுத்தது.
இதுகுறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி வெளியிட்டுள்ள பதிவில், ‘ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துமாறு இந்தியாவை பல மாதங்களாக அமெரிக்கா மிரட்டி வந்தது. ஆனால், ஈரானுடன் போர் தொடங்கி இரண்டு வாரங்களே ஆன நிலையில், தற்போது ரஷ்ய எண்ணெயை வாங்குமாறு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை வெள்ளை மாளிகை கெஞ்சி வருகிறது. ஈரானின் கார்க் தீவில் உள்ள ராணுவ நிலைகள் மீது டிரம்ப் தலைமையிலான அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.
இருப்பினும், உலகளாவிய எரிசக்தி பாதிப்பை தவிர்க்க எண்ணெய் கிணறுகள் மீதான தாக்குதலை தவிர்த்துள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியாவுடனான நீண்டகால நட்புறவை கருத்தில் கொண்டு, இந்திய கொடி ஏந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஈரான் அனுமதி அளித்துள்ளது. அமெரிக்காவின் இந்த இரட்டை நிலை வெட்கக்கேடானது’ என்று விமர்சித்துள்ளார்.
