பாக்தாத்: அமெரிக்க போர் விமானம் ஈராக்கில் கீழே விழுந்த விபத்தில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். போர் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்ப பயன்படுத்தப்படும் KC-135 ரக விமானம் ஈராக்கின் மேற்குப் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது கீழே விழுந்ததாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.
ஈரான் நாட்டின் ஏவுகணை கட்டமைப்புகள் மற்றும் அணு ஆயுத திட்டங்களை அழிக்கும் நோக்கில், டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கடந்த பிப். 28ம் தேதி முதல் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ என்ற பெயரில் தீவிரமான ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்த போர் நடவடிக்கை தொடங்கியதில் இருந்து இதுவரை அமெரிக்காவின் மூன்று எப்-15 ரக போர் விமானங்கள் குவைத் நாட்டின் வான் பாதுகாப்பு படையினரால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டன. அந்த விபத்துகளில் சிக்கிய விமானிகள் அனைவரும் பாராசூட் மூலம் குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்நிலையில், நேற்று அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான கே.சி-135 ஸ்டிராடோடாங்கர் என்ற எரிபொருள் நிரப்பும் விமானம் ஈராக்கின் மேற்கு வான்பரப்பில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் விமானி, துணை விமானி உட்பட மொத்தம் 6 வீரர்கள் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 வீரர்கள் உயிரிழந்தனர் என அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.
வழக்கமாக போர் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பும் பணியில் ஈடுபடும் இந்த ரக விமானங்களில், அவசர காலத்தில் தப்பிப்பதற்கான எஜெக்ஷன் சீட் எனப்படும் இருக்கை வசதிகள் கிடையாது. இந்த விபத்தின்போது இரண்டு விமானங்கள் வான்வழியில் ஒன்றாக பயணித்த நிலையில், ஒரு விமானம் விபத்துக்குள்ளாகி சிதறியது.
மற்றொரு விமானம் அவசர கால எச்சரிக்கையை விடுத்தபடி இஸ்ரேல் நாட்டின் பென் குரியன் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள அமெரிக்க ராணுவ மையம், ‘இந்த விபத்து நட்பு நாடுகளின் வான் எல்லைக்குள் நடந்துள்ளது. இது எதிரிகளின் தாக்குதலோ அல்லது தவறுதலான துப்பாக்கிச் சூடோ கிடையாது’ என்று தெரிவித்துள்ளது.
இதன் மூலம் தொழில்நுட்ப கோளாறு அல்லது இரண்டு விமானங்கள் வான்வெளியில் மோதியதே விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இருப்பினும், இந்த விமானத்தை தங்களது ஆதரவு படைப்பிரிவினர் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து நடந்த இடத்தில் மீட்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
