யமுனைத் துறைவனான கிருஷ்ணன், தாமிரபரணியிலும் திருமேனியை நனைக்க ஆசைப்பட்டான். அவன், கால தேச வர்த்தமானங்களையெல்லாம் கணக்கில் கொள்வதில்லை. துவாபரயுகம், கலியுகம் என்பதெல்லாம் அவனுக்குக் கிடையாது. பக்தர்களின் இருதயம் வெண்ணெயாக இருந்தால் உடனே கவர்ந்து கொள்வான். எந்தக் காரணமுமின்றி தன்னை காட்டிக் கொள்வான். எப்போதாவது அவன் திருநாமத்தை சொல்லியிருந்தாலும் கூட ‘அப்போது என்னை அழைத்தாயே, இப்போது வருகிறேன்’ என்று எவர் கனவிலாவது வந்து கோயில் கட்டச் சொல்வான். ‘நீ மறந்தாலும் நான் உன்னை தொடர்கிறேன்’ என்று கண் சிமிட்டுவான். அப்படித்தான் ஹரிகேசநல்லூரிலும் கோயில் கொண்டான்.
ஹரிகேசநல்லூர் தாமிரபரணி, கடனாநதி, ராமநதி என்று மூன்று நதிகளும் கூடுமிடத்தில் அமைந்துள்ளது. பரந்து விரிந்த வயல்வெளிகளை கொண்டிருக்கிறது. புகழ்பெற்ற சங்கீத வித்வான்களையும் பாகவத ரத்னங்களையும் பெற்றெடுத்த பெருமை பெற்ற தலம்.
சுமார் நூற்றைம்பது வருடங்களுக்கு முன்பு சாம்பசிவ ஐயாவையர் என்பவர் கிருஷ்ணனின் பரமபக்தராக விளங்கினார். எந்த நேரமும் அவர் நாவில் கிருஷ்ண நாமம் நர்த்தனமாடும். கண்ணன், தன் பக்தனை கஷ்டங்கள் கொடுத்துதான் ஆட்கொள்வான் என்று அவருக்குத் தெரியும். வேண்டாததை விலக்கி தன்னையே கொடுக்கும் தயாபரனல்லவா அவன்! அதனாலே கர்மவினைகள் போல சிறுசிறு கஷ்டங்களை கொடுப்பான். அப்படித்தான் சாம்பசிவ ஐயாவையருக்கு திருமணமாகி பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்தது. ஊரிலுள்ள சிலர் கேலி செய்தனர். உறவினர்கள் அவருடைய மனைவியைப் பல விசேஷங்களில் புறக்கணித்தனர். ஆனாலும், சாம்பசிவர் சதா நேரமும் கிருஷ்ண தியானத்திலேயே கிடந்தார்.
ஒருநாள் அவரது கனவில் கிருஷ்ணன் தோன்றினான். ஓரக் கண்களால் பார்த்துச் சிரித்தான். ‘‘ஆற்றுப் படுகையிலே ஆறடியன் விளையிலே, ஆறடிக்குக் கீழ் நான் இருக்கிறேன்’’ என பாசுரம்போல பேசினான். எனக்கென்று கோயில் கட்டு என்று அருளாணை இட்டான். சாம்பசிவர் முகம் மலர்ந்தார். பாதி இரவுக்கு மேல் தூக்கம் வரவில்லை. விடியற்காலையிலேயே ஆற்றின் பக்கமாக சென்றார். தேடத் தொடங்கினார். தேடிய சில நாழிகைகளிலேயே தகதகவென்று வெண்ணெயை கையில் ஏந்திய கிருஷ்ணன் கிடைத்தான். மார்போடு அணைத்து வீட்டிற்கு வந்தார். ஊரார் திரண்டனர். திரண்ட வெண்ணெயை கையில் ஏந்திய கிருஷ்ணனை ‘நவநீத கிருஷ்ணா’ என்று உருகி அழைத்தனர். அன்றைய தினமே கோயில் கட்டும் பணியைத் துவங்கினர்.
சில நாட்களில் கும்பாபிஷேகம் செய்தனர். சாம்பசிவ ஐயாவையருக்கு அழகான வாரிசும் பிறந்தது. இன்றும் நவநீத கிருஷ்ணன் இக்கோயிலின் மூலவராக அருள்பாலிக்கிறான். சிறியதாக இருந்தாலும் கிருஷ்ண சாந்நித்யத்தோடு திகழ்கிறது ஆலயம். கிருஷ்ணனின் அருளோடு தாமிரபரணியின் தென்றலும் கலந்து வருட, நம்மை நாம் மெல்ல இழக்கிறோம். மூலவரைப் போலவே நவநீதனின் உற்சவ விக்ரமும் கொள்ளை அழகு. எல்லா விழாக்காலங்களிலும் ஊரே களைகட்டுகிறது.எப்படி செல்வது: திருநெல்வேலி – பாபநாசம் பாதையில் 27 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த அழகு கிருஷ்ணனின் கோயில்.
