லாலாப்பேட்டை, மார்ச்.12: கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகைகளை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி வெள்ளைய நாயக்கர்களம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (65). விவசாயியான இவர் தனது மனைவி பூங்கோதை மற்றும் மகன் அசோக் ஆகியோருடன் வசித்து வருகிறார். இவர்கள், வெளியே சென்றிருந்தபோது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 19 பவுன் தங்க நகைகள், 5 ஜோடி வெள்ளி கொலுசுகள் மற்றும் 2 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றனர்.இது குறித்து, விவசாயி முருகேசன் அளித்த புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
