திண்டுக்கல், மார்ச் 12: திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களுக்கான பணியாளர் நாள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது என மண்டல இணை பதிவாளர் ஜி.ட்டி. ராகவ் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு சட்டப்பேரவையில் கூட்டுறவு துறைக்கான எண்- 3க்கான மானிய கோரிக்கையின் போது கூட்டுறவு துறை அமைச்சரால் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களின் குறைகளை தீர்வு செய்திடும் வகையில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மண்டல அளவில் பணியாளர் நாள் (குறைதீர்) நிகழ்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து திண்டுக்கல் மண்டலத்தில் பதிவாளரின் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்களுடைய பணி திறனை மேம்படுத்தி உறுப்பினர்களுக்கு சிறந்த சேவை வழங்கும் பொருட்டும், பணி தொடர்பாகவும், பணியின் போதும் அல்லது வேறு வகையிலும் ஏற்படும் குறைகளை பகிர்ந்திடவும், அக்குறைகளை விதிகளுக்குட்பட்டு தீர்வு செய்திடும் வகையில் மண்டல அளவில் பணியாளர் நாள் நாளை 13.03.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் கூட்டுறவு நகர் திண்டுக்கல்- திருச்சி சாலையில் உள்ள திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் மண்டல இணை பதிவாளர் மற்றும் இணை பதிவாளர் மேலாண்மை இயக்குநர் திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி ஆகியோரின் தலைமையில் நிகழ்வு நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் பணியிலிருந்து ஓய்வு பெற்ற நபர்கள் தங்களுடைய கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பங்களை வழங்கி பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
