திருவனந்தபுரம்: கடந்த வருடம் பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளா மூலம் பிரபலமானவர் மபி மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மோனாலிசா போஸ்லே. வளையல், மாலை உள்பட அணிகலன்களை விற்பனை செய்து வந்த இவருடைய காந்தக் கண்கள் அனைவரையும் கவர்ந்தது. இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தன. இதற்கிடையே இவருக்கு முகநூல் மூலம் அறிமுகமான மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பர்மான் கான் என்பவருடன் காதல் ஏற்பட்டது. அவருடைய காதலுக்கு தந்தை ஜெய்சிங் போஸ்லே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு சினிமா படப்பிடிப்புக்காக மோனாலிசா தன்னுடைய தந்தையுடன் கேரளாவுக்கு வந்தார்.
காதலன் பர்மான் கானும் கேரளாவுக்கு வந்தார். மோனாலிசா தன்னுடைய காதலன் பர்மான் கானுடன் திருவனந்தபுரம் தம்பானூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார். தங்களுடைய காதலுக்கு தந்தை எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி மோனாலிசா போலீசில் ஒரு புகார் கொடுத்தார். மோனாலிசாவுக்கு 18 வயது ஆகிவிட்டதால் அவருடைய விருப்பப்படித் தான் திருமணத்தை நடத்த முடியும் என்று போலீசார் அவரிடம் கூறினர். தொடர்ந்து காதலனுடன் மோனாலிசாவை போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர், திருவனந்தபுரம் அருகே உள்ள பூவார் அருமானூர் நயினார் கோயிலில் நேற்று மாலை மோனாலிசாவுக்கு பர்மான் கான் தாலி கட்டினார்.
