மார்ச் 28ம் தேதி தொடங்கும் 19வது சீசன் ஐபிஎல் தொடர் அட்டவணை நாளை வெளியாகிறது: முதல் போட்டியில் ஆர்சிபியுடன் மோதுவது யார்?

 

மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஆண்டுதோறும் ஐபிஎல் டி.20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்ததொடரின் 19வது சீசனுக்கான அட்டவணை நாளை வெளியாகிறது. தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் முதல்கட்டமாக 20 நாட்களுக்கான அட்டவணை வெளியிடப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் எஞ்சிய போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகும் என தெரிகிறது. மார்ச் 28ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது.

வழக்கமாக சாம்பியன் கோப்பையை வெல்லும் அணியின் சொந்த மைதானத்தில் தான் முதல்போட்டி மற்றும் இறுதி போட்டிநடத்தப்படும். அதன்படி நடப்பு சாம்பியனான ஆர்சிபியின் மைதானமான பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில்தான் தொடக்க விழா மற்றும் முதல் போட்டி நடத்தப்படலாம். முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூருஅணியுடன் மோதப்போகும் அணி எது என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தொடருக்கு முன்பாக அடுத்தவாரத்தில் கேப்டன்கள் சந்திப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது. இதனிடையே ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேஸ் தாக்குதலால் இந்தியாவிற்கு கேஸ் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வர்த்தக சிலிண்டர்கள் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் ஓட்டல்கள் மூடப்படும் அபாயம் உள்ளது. இந்த நிலை ஏற்பட்டால் ஐபிஎல் வீரர்கள் தங்கும் நட்சத்திர ஓட்டல்களும் பாதிக்கப்படும். இதனால் ஐபிஎல் தொடருக்கும் சிக்கல் உருவாகலாம் எனற கூறப்படுகிறது. இதுபற்றி ஐபிஎல் தலைவர் அருண் தூமல், லீக் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்தார். ”நாங்கள் நிலைமையை மறுஆய்வு செய்து வருகிறோம். இது மாறிக்கொண்டிருக்கும் சூழல் என்பதால், இப்போதைக்கு எதையும் கூற இயலாது. ஆனால், நிலைமையின் தேவைக்கேற்ப நாங்கள் முடிவெடுப்போம்,” என்று தூமல் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: