பென்னாகரத்தில் சாலையை கடக்க முயன்ற யானைக்கு தொல்லை கொடுத்த 2 வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

பென்னாகரம் : பென்னாகரம் வனப்பகுதியில், சாலையை கடக்க முயன்ற ஒற்றை யானைக்கு தொந்தரவு அளித்த வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.

கோடை காலம் தொடங்கியதால் ஓசூர், அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட வனப்பகுதிகளில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம், கூட்டமாக ஒகேனக்கல் -பென்னாகரம் வனப்பகுதியில் உணவிற்காகவும், தண்ணீருக்காகவும் வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ளன.

ஒகேனக்கல், பென்னாகரம் வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகள் ஒகேனக்கல், சின்னாறு பகுதிகளில் தண்ணீர் குடிப்பதற்காக தினந்தோறும் வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ள பென்னாகரம்- ஒகேனக்கல் செல்லக்கூடிய பிரதான சாலையை கடந்து சென்று, தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் சாலையை கடந்து வனப்பகுதிக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது.

அவ்வாறு சாலையை கடக்கும் யானைகளை, அவ்வழியாக செல்லும் போது, வாகன ஓட்டிகள் சிலர் அதிக ஒலி எழுப்பிய படி செல்கின்றனர். மேலும் தொந்தரவு செய்வதுடன் செல்பி மற்றும் வீடியோ எடுத்து அச்சுறுத்தி வருகின்றனர்.

இதனை தடுக்கும் வகையில் ஒகேனக்கல் வனத்துறை சார்பில், தர்மபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் உத்தரவின்பேரில், பென்னாகரம் வனச்சரக அலுவலர் சிவகுமார் அறிவுறுத்தல் படி, தினந்தோறும் பென்னாகரம் -ஒகேனக்கல் வன சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று வழக்கம்போல் ஒகேனக்கல் வனவர்கள் மகேஸ்வரி, சுவாதி ஆகியோர் தலைமையிலான வனத்துறை பணியாளர்கள் ஒன்றிணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது முண்டச்சுபள்ளம் பகுதியில் ஒற்றை யானை ஒன்று தண்ணீர் குடிப்பதற்காக சாலையை கடந்துள்ளது. அப்போது, யானையை கண்ட வனவர்கள் யானை, சாலையை கடந்து செல்லும் வரை இரு புறமும் வாகனங்களை தடுத்து நிறுத்தி, யானை சாலையை கடக்கும் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

யானை சாலையை கடந்த பின்பு, இருபுறமும் நிறுத்தப்பட்ட வாகன ஓட்டிகளை விரைவாக அனுப்பி வைத்தனர். அப்போது சாலையை கடந்த யானையை வீடியோ எடுத்தும், அதிக சத்தம் எழுப்பியும் தொந்தரவு செய்த 2 வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்து அபராதம் விதிக்கப்பட்டது. ரோந்து பாதுகாப்பு பணியின்போது வனக்காப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, காளிமுத்து, சுஜாதா மற்றும் வன காவலர்கள் மோகன, அனிதா ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: