தாராபுரம், மார்ச் 11: தாராபுரம் நகரில் நகராட்சி 1வது வார்டில் குடிநீர் வினியோகம் அடிக்கடி தடைபடுவதாகவும், முறையாக குடிநீர் வினியோகிக்க கோரியும் தாராபுரம் இந்து மக்கள் கட்சி நகர தலைவர் செல்வராணி உட்பட 5 பேர் தாராபுரம்-திருப்பூர் பைபாஸ் சாலையில் திடீரென அமர்ந்து மறியல் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவம் அறிந்து அப்பகுதிக்குச் சென்ற தாராபுரம் போலீஸ் டிஎஸ்பி சிவக்குமார், போக்குவரத்து ஆய்வாளர் சஜினி மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி இந்து மக்கள் கட்சியின் நகர தலைவர் செல்வராணி (39), ஆனந்தி (39), உதயகுமாரி (43), மனோகரி (56), அய்யம்மாள் (57) ஆகிய 5 பேரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
