இழுத்து மூட வேண்டியதுதான்: ஓட்டல் உரிமையாளர்கள் வேதனை

 

சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஓட்டல் சேவைகள் பெருமளவில் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பல முன்னணி ஓட்டல்களிலும் ஒரு நாளைக்கு மட்டுமே சிலிண்டர்கள் கையிருப்பு உள்ளதாக கூறப்படுகிறது. உடனடியாக விநியோகம் சீரடையாவிட்டால், கடையை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என அதன் உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

முருகேசன் (முருடீஸ் ஓட்டல்): சிலிண்டர் தட்டுப்பாடு மிக அதிக அளவில் உள்ளது. எங்கள் உணவகத்தைப் பொறுத்தவரை நாங்கள் பயந்து கொண்டிருக்கிறோம். சிலிண்டர் முடிந்துவிட்டால் அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. மூன்று சிலிண்டர்கள் தான் இருக்கின்றன. அதை வைத்துக்கொண்டு தேவைக்கு ஏற்ப சமாளித்து பயன்படுத்தி வருகிறோம். முன்பு போல் இப்போது இல்லை, ஏனென்றால் அப்போதெல்லாம் சிலிண்டர் இல்லை என்றால் விறகு அல்லது சீமை எண்ணெய் பயன்படுத்தி உணவு சமைத்து வந்தோம். தற்போது அது செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் உணவகத்தில் மொத்தம் 30க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். சிலிண்டர் கிடைக்காவிட்டால் உணவகத்தை மூட வேண்டும். பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அடுத்தடுத்த பிரச்னைகள் எழுகின்றன.

தினேஷ் (ஓட்டல் ஸ்ரீ வெங்கடேஸ்வரா): காஸ் சிலிண்டர் ஒருநாள் பயன்படுத்தும் அளவுக்கு மட்டுமே எங்கள் உணவகத்தில் உள்ளது. சிலிண்டர் கொடுக்கும் நிறுவனத்துடன் பேசிக்கொண்டே இருக்கிறோம். அவர்கள் ஏதாவது ஏற்பாடு செய்து தருகிறோம் என்று தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் சிலிண்டர் தீர்ந்துவிட்டால் என்ன செய்வது என்று தெரியவில்லை. எங்கள் உணவகத்தில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஐந்து முதல் ஆறு சிலிண்டர்கள் தேவைப்படும். ஆனால் தற்போது சிலிண்டர் கட்டுப்பாடு காரணமாக சிக்கனமாக பயன்படுத்தி வருகிறோம். இதற்கு முன் எல்லாம் சிலிண்டர் தட்டுப்பாடு வருவதற்கு முன்பே அறிவிப்பு கொடுப்பார்கள். தற்போது திடீரென்று அறிவித்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறோம். சிலிண்டர் நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். சிலிண்டர் இல்லை என்றால் கடையை மூடி தான் ஆக வேண்டும். இது எங்கள் உணவகத்தில் பணியாற்றும் அனைவரையும் பாதிக்கும். அது மட்டுமின்றி எங்களை நம்பி வரும் மக்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பாக அமையும் என்று கருதுகிறோம்.

முத்துப்பாண்டி (விமலா ஓட்டல்): எங்கள் உணவகத்திற்கு தற்போது சிலிண்டர் தீர்ந்துவிட்டது. நாங்கள் வெளியில் வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம். எவ்வளவு நாட்கள் இது தொடரும் என்று தெரியவில்லை. ஏனென்றால் நாங்கள் உணவகத்துடன் டீக்கடையும் நடத்தி வருகிறோம். தற்போது டீக்கடைக்கு ஒரு சிலிண்டர் மட்டுமே உள்ளது. அது விரைவில் தீர்ந்துவிடும். உணவகத்திற்கு சிலிண்டர் கிடைக்காவிட்டால் கடையை மூடிவிட வேண்டியதுதான். வெளியில் இருந்து தொடர்ந்து சிலிண்டர்கள் வாங்க முடியாது. கடையை மூடினால் எங்கள் உணவகத்தில் பணியாற்றும் நபர்களுக்கு சம்பளம் கொடுத்தாக வேண்டும். வாடகை, மின்சார கட்டணம் ஆகியவற்றையும் செலுத்தியாக வேண்டும். எனவே சிலிண்டர் இல்லை என்றால் அது சிலிண்டரை மட்டும் பாதிக்காது; உணவகத்தையே முழுமையாகப் பாதிக்கும். விரைவில் இது சரியாக வேண்டும்.

தேன்மொழி (கார்க்திக் டிபன் சென்டர்): எங்கள் உணவகம் எப்போதும் மூடுவது கிடையாது. 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டே இருக்கும். சென்னையில் மொத்தம் நான்கு இடங்களில் எங்களது உணவகங்கள் உள்ளன. “பசி இருக்கக் கூடாது” என்பதற்காக 24 மணி நேரமும் ஏதாவது உணவு இருந்துகொண்டே இருக்கும். தற்போது சிலிண்டர் பிரச்னை காரணமாக எங்களது ஒரு கிளையை மூடிவிட்டோம். அண்ணா சாலையில் உள்ள கிளையில் இருப்பதை வைத்துக்கொண்டு பயன்படுத்தி வருகிறோம். ஒரு நாளைக்கு காலை இரண்டு, இரவு இரண்டு என நான்கு சிலிண்டர்கள் தேவைப்படும். ஆனால் தற்போது காலை ஒரு சிலிண்டர் மட்டுமே பயன்படுத்துகிறோம். தேவைப்படும்போது ஆன் செய்து, ஆப் செய்தும் பயன்படுத்துகிறோம். இது எங்களது நேரத்தையும், உணவு தயாரிப்பையும் பெரிய அளவில் பாதிக்கிறது. அது மட்டுமின்றி எங்களது உணவகத்திற்கு தினமும் வருபவர்கள், கடையை மூடிவிட்டால் அடுத்தடுத்த நாட்களில் எப்படி வருவார்கள். சிலிண்டர் கிடைக்காவிட்டால் உணவகத்தை மூடித்தான் ஆக வேண்டும்.

நாராயணன் (ஓட்டல் ஆனந்தா): தினமும் நாங்கள் 8 முதல் 9 சிலிண்டர்கள் பயன்படுத்துவோம். எங்களுக்கு தட்டுப்பாடு மிக அதிக அளவில் உள்ளது. இவ்வளவு பெரிய பிரச்னைக்கு காரணம் முன்னறிவிப்பு இல்லாமல், 2 மணி நேரத்தில் சிலிண்டர் இல்லை என்று அறிவித்தார்கள். முன்பெல்லாம் 4 நாட்களுக்கு முன்பே அறிவிப்பார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. எங்களுக்கு 3 கிளைகள் உள்ளன. மாற்றி மாற்றித்தான் பயன்படுத்தி வருகிறோம். தற்போது இருப்பது ஒரு நாளைக்கு வரும் அளவுதான். சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக எங்கள் உணவகத்தில் கலவை சாதம், சோழா பூரி, சாம்பார் வகைகள், குருமா வகைகள் போன்ற பல உணவு வகைகளை நிறுத்திவிட்டோம். ஒரு உணவகத்திற்கு தேவையானது நீர் மற்றும் எரிபொருள் தான். தற்போது எரிபொருள் இல்லாதது எங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் இந்தப் பிரச்னை முடியும் வரை பொறுமையாக இருக்க வேண்டும்.

திலீப் குமார் (கார்டன் டீ கடை): எங்கள் டீ கடைக்கு தினமும் 2 சிலிண்டர்கள் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் கொடுக்கும் நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். தருவதாகச் சொன்னார்கள். அது இல்லாவிட்டால் கடையை மூட வேண்டியதுதான். தற்போது பிளாக்கில் தான் சிலிண்டர் வாங்கி வருகிறோம். பொதுவாக ரூ.2000 இருக்கும். தற்போது ரூ.3000க்கு மேல் கொடுத்து வாங்குகிறோம். இப்படியே போனால் இன்று அல்லது நாளை கடையை மூட வேண்டியதுதான்.

கதிர்வேல் (ஓட்டல் சாமுண்டீஸ்வரி): சிலிண்டர் தட்டுப்பாடு மிக மோசமாக உள்ளது. இதனால் எங்கள் உணவகத்தில் பணியாற்றும் நபர்கள் பாதிக்கப்படுகின்றனர். தற்போது கடை திறக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. விரைவாக அரசு இதற்கு தீர்வு காண வேண்டும். ஒரு நாளைக்கு 4 அல்லது 5 சிலிண்டர்கள் தேவைப்படுகிறது. தற்போது கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறோம். இதனைப் பயன்படுத்தி காஸ் ஏஜென்சிகள் எல்லாம் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றன. 2 நாட்களாக சரியாக காஸ் ஏஜென்சிகள் பதில் தரவில்லை. எனவே விரைந்து இந்த பிரச்னை முடிய வேண்டும்.

Related Stories: