சென்னை: திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் சட்டசபை தேர்தலில் கூடுதலான தொகுதிகளை வழங்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறோம் என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று மார்க்சிஸ்ட் கட்சியுடன் 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கே.கனகராஜ், கே.சாமுவேல்ராஜ், எஸ். கண்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் அளித்த பேட்டி:
திமுக பேச்சுவார்த்தை குழுவுடன் இரண்டாம் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தது. அவர்கள் தொகுதிகளின் எண்ணிக்கையை சொல்லியிருக்கிறார்கள். அதில் எங்களுக்கு ஏற்பு இல்லை. கூடுதலான தொகுதிகளை வழங்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறோம்.
கடந்த காலத்தில் இல்லாத பல புதிய கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளன என்று ஒரு நியாயமான காரணத்தை அவர்கள் தரப்பில் இருந்து சொல்லியிருக்கிறார்கள். அது ஏற்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. நாங்கள் எதிர்பார்த்த கூடுதலான தொகுதிகளுக்கு வாய்ப்பு இல்லை. கடந்த முறை போட்டியிட்டதை விட கூடுதலான தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற முறையில் நாங்கள் வற்புறுத்தியிருக்கிறோம். முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பேசிவிட்டு மீண்டும் பேசலாம் என்று தெரிவித்து இருக்கிறார்கள். மீண்டும் பேச்சுவார்த்தை என்பது நாளை(இன்று) தொடங்கும். எண்ணிக்கை இறுதியான பிறகு தான் என்னென்ன தொகுதிகள் என்பதை இறுதிப்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
