சென்னை: சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்வில், தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்ட ‘தமிழரசு’ மின்னிதழின் இணையதள பயன்பாடு மற்றும் கைப்பேசி செயலியை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
கலைஞர் ஆட்சி காலத்தில், 1970ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘தமிழரசு’ இதழ், கடந்த பல ஆண்டுகளாக தமிழ்சார் ஆய்வுகள், அரசியல், சமூக, பண்பாட்டு மற்றும் இலக்கிய செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், சமூக சிந்தனையாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் கருத்துகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இந்த இதழ் முக்கிய பங்காற்றி வருகிறது.
தற்போது முழுமையாக டிஜிட்டல் வடிவமாக மாற்றப்பட்டுள்ள ‘தமிழரசு’ மின்னிதழ், தமிழ் மொழியின் தொன்மை மற்றும் வரலாறு, தமிழ் சாகித்ய மரபுகள், மொழியியல், கல்வி, சமூக மாற்றங்கள், பண்பாட்டு பாரம்பரியம், ஆய்வு கட்டுரைகள் உள்ளிட்ட தரமான உள்ளடக்கங்களை வழங்குவதுடன், முதல்வரின் உரைகள், சட்டமன்ற பேரவையில் ஆற்றப்படும் முக்கிய உரைகள், அரசின் முக்கிய அறிவிப்புகள், சிறப்பு மலர்கள் மற்றும் நினைவுச் சிறப்பிதழ்கள் ஆகிய அனைத்தும் இனி மின்னிதழாகவும் வெளியிடப்படும்.
தொழில்நுட்ப அணுகல் வசதியாக, Android இயங்குதளத்தில் செயல்படும் கைப்பேசிகளுக்காக ‘தமிழரசு’ மொபைல் செயலி Google Play Store-ல் பதிவிறக்கம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. iOS இயங்குதளத்தை பயன்படுத்தும் வாசகர்கள், சந்தா பெற்ற பின்னர் இணையதள பயன்பாட்டின் மூலம் ‘தமிழரசு’ மின்னிதழை அணுகி பயனடையலாம். (இணையதள முகவரி; www.tamilarasu.org) ’தமிழரசு மின்னணு இதழினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் ராஜாராமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
