×

எரிபொருள் தட்டுப்பாட்டால் பாக்., இலங்கை, வங்கதேசம் திணறல்: பெட்ரோல், டீசல் விலை உயர்வு: பள்ளி, கல்லூரிகள் மூடல்

 

இஸ்லாமாபாத்: உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வால் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசத்தில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சிக்கன நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் புதிய சிக்கன நடவடிக்கைகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி, கல்வி நிறுவனங்களுக்கு வரும் 16ம் தேதியிலிருந்து இரண்டு வார கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் உடனடியாக ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஒன்றிய மற்றும் மாகாண அளவிலான அரசு வாகனங்களில் 60 சதவீத வாகனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் பயன்பாட்டை குறைக்க, அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஆம்புலன்ஸ் மற்றும் பொது போக்குவரத்து பேருந்துகளைத் தவிர மற்ற அரசு வாகனங்களுக்கான எரிபொருள் படி 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும். வங்கிகளைத் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியை சமாளிக்க, அமைச்சர்கள் தங்களது இரண்டு மாத சம்பளத்தை விட்டுக் கொடுக்க முன்வந்துள்ளனர்.

அதேபோல், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தில் 25 முதல் 50 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்பட உள்ளது. 3 லட்சம் ரூபாய்க்கு மேல் ஊதியம் பெறும் உயர் அதிகாரிகள் தங்களது இரண்டு நாள் சம்பளத்தை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, வரும் ஜூன் வரை புதிய வாகனங்கள், ஏர் கண்டிஷனர்கள் மற்றும் பர்னிச்சர்கள் வாங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரமலான் மாதத்தில் அரசு சார்பில் இப்தார் விருந்துகள் மற்றும் அதிகாரப்பூர்வ இரவு விருந்துகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.55 உயர்த்தப்பட்டுள்ளது. வங்கதேசம் முழுவதும் ஸ்தம்பிப்பு: இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம் தனது எரிபொருள் தேவையில் 95 சதவீதத்தை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்து வருகிறது. தற்போது நிலவும் சூழலை சமாளிக்க, வங்கதேச அரசு அதிகாரப்பூர்வமாக எரிபொருள் ரேஷன் முறையை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, பைக் வைத்திருப்பவர்கள் ஒரு முறைக்கு 2 லிட்டர் மட்டுமே பெட்ரோல் வாங்க முடியும். கார்களுக்கு 10 லிட்டர் என்ற உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேருந்து மற்றும் லாரிகள் போன்ற பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு மட்டும் 70 முதல் 220 லிட்டர் வரை எரிபொருள் வழங்கப்படுகிறது. ஈகைத் திருநாள் விடுமுறைக்கு முன்னதாகவே அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

இலங்கை: சில்லறை எரிபொருள் விலையை 8 சதவீதத்திற்கும் மேலாக இலங்கை உயர்த்தியுள்ளது.குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் வகைகளின் விலைகள் லிட்டருக்கு ரூ.22 உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு நடத்தும் சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. மேலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Tags : Pakistan ,Sri Lanka ,Bangladesh ,Islamabad ,Shehbaz Sharif ,
× RELATED ஈரானின் புதிய உச்ச தலைவராக பதவியேற்ற...