காரமடை: காரமடை வனச்சரகத்தில், இயற்கையோடு இணைந்த பரளிக்காடு சூழல் சுற்றுலா சுற்றுலா பயணிகள் இடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. பரிசலில் பயணம் செய்தும், பழங்குடியினருடன் நடனமாடியும் பயணிகள் உற்சாகமடைந்தனர்.
காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட பரளிக்காடு பகுதி மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பில்லூர் அணைக்கு மிக அருகாமையில் உள்ளது. காரமடை வனத்துறை சார்பில் பரளிக்காடு சூழல் சுற்றுலா பழங்குடியின மக்களின் பங்களிப்போடு நடத்தப்பட்டு வருகிறது. இயற்கை எழில் நிறைந்த பரளிக்காடு கோவை காந்திபுரத்தில் இருந்து 70 கிமீ தொலைவிலும், காரமடையில் இருந்து 30 கிமீ தொலைவிலும் உள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பரளிக்காடு சூழல் சுற்றுலாவுக்கு பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழல் சுற்றுலாவில் பங்கேற்க https://Coimbatorewilderness.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக பதிவு செய்து கட்டணம் செலுத்தி செல்ல வேண்டும்.
இந்த சூழல் சுற்றுலாவில் பங்கேற்கும் சுற்றுலா பயணிகளுக்கு பில்லூர் அணையில் பரிசல் பயணம், பழங்குடியின மக்களின் பாரம்பரியமிக்க 10க்கும் மேற்பட்ட உணவு வகைகள், அத்திக்கடவு ஆற்றில் மூலிகை குளியல்,வனப்பகுதியில் நடைப்பயணம், பழங்குடியினர் வாழ்வை பிரதிபலிக்கும் பாரம்பரிய நடனம் என பல்வேறு வகையில் வனத்துறையினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கின்றனர். பரளிக்காடு, பூச்சமரத்தூர், பில்லுார், நீராடி உட்பட பல்வேறு பழங்குடியின கிராமங்களில் இருந்தும் பரிசல் ஓட்டுநர்கள், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் என ஏராளமான பழங்குடியின மக்கள் இந்த சூழல் சுற்றுலாவால் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறியதாவது: பரளிக்காடு சூழல் சுற்றுலாவுக்கு வலுசேர்க்கும் விதமாகவும், பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் விதமாகவும், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தற்போது பரளிக்காடு சூழல் சுற்றுலா மூலம் சுமார் 80 முதல் 100 பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. மேலும், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேம்பட அண்மையில் அம்மக்களின் பாரம்பரியமிக்க நடனமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடனம் சுற்றுலா பயணிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் இவர்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது.
மேலும், சுற்றுலா பயணிகள் பழங்குடியின மக்களின் பாரம்பரியத்தை அறிந்து கொள்ள முடிகிறது. இந்த சூழல் சுற்றுலாவால் வனத்துறைக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே நட்புறவு மேம்பட்டுள்ளது. பழங்குடியின மக்களின் தேவைகளை அறியவும் வனத்துறையினருக்கு இந்த சுற்றுலா ஒரு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. பரளிக்காடு சூழல் சுற்றுலா சுற்றுலா பயணிகள் இடையே மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற திட்டமாக இருந்து வருகிறது. பரிசலில் பயணம், அத்திக்கடவு ஆற்றில் மூலிகை குளியல்,பழங்குடியினர் நடனம் ஆகியவற்றால் சுற்றுலா பயணிகள் மீண்டும், மீண்டும் இங்கு வர ஆர்வமாக உள்ளனர்.
தற்போது தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதனால் விரைவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட உள்ளதால் பரளிக்காடு சூழல் சுற்றுலாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். அதற்கேற்ப காரமடை வனத்துறை சார்பில் ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
