×

திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதியில் விற்பனை மந்தம்; ஆடு, மாடுகளுக்கு உணவாகும் தக்காளி: விவசாயிகள் கவலை

திருத்தணி: திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் ஒரு கிலோ ரூ.200க்கு விற்ற தக்காளி இன்று குறைந்தபட்ச விலைக்கு கூவி கூவி விற்றாலும் வாங்க ஆளில்லை எனவும், மகசூலுக்கு தயாராக இருக்கும் தக்காளிகளை அறுவடை செய்யாமல் விட்டுள்ளதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் தக்காளி மார்க்கெட்டுக்கு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி பெயர் பெற்றது. இப்பகுதியில் சாகுபடி செய்யப்படும் தக்காளி நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழக எல்லையில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் இருந்து பெருமளவில் சென்னை, வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த மாதம் வரை ஒரு கிலோ தக்காளி ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்ததால் விவசாயிகளுக்கு கணிசமான வருவாய் கிடைத்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக உள்ளூர் விவசாயிகள் சாகுபடி செய்த தக்காளி விளைச்சல் 2 மடங்கு அதிகரித்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. போதிய விற்பனை இல்லாததால் தக்காளி தேக்கமடைந்து வீணாகி வருகிறது. மேலும் திருத்தணி, பள்ளிப்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப் படுகிறது.

கிராமபுறங்களில் கூவிகூவி குறைந்த விலைக்கு விற்பனை செய்தாலும் தக்காளிகளை வாங்க ஆளில்லை என அறுவடை செய்து எடுத்து வந்த விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். விற்பனை விலைவிட அறுவடை கூலி அதிகளவில் இருப்பதால் பெரும்பாலான விவசாயிகள் அறுவடை செய்யாமல் ஆடு, மாடுகளுக்கு உணவாக தோட்டத்திலேயே தக்காளிகளை விட்டுவிட்டோம் என தெரிவிக்கின்றனர்.

Tags : Prittani ,THIRUTHANI ,TIRUTHANI ,SKOLABATI ,
× RELATED தமிழ்நாட்டு சொந்தங்களே மனமார்ந்த...