87 வயதாகிவிட்டதால் ராமதாஸால் நிர்வாக முடிவுகளை எடுக்க முடியவில்லை: அன்புமணி

சென்னை: பாமக பெயர், சின்னம் தொடர்பாக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பாமக தலைவர் அன்புமணி மனு தாக்கல் செய்துள்ளார். அன்புமணி தாக்கல் செய்த மனுவுக்கு மார்ச் 11க்குள் பதிலளிக்க ராமதாஸுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமதாஸை சிலர் தவறாக வழிநடத்துகின்றனர் என்று உரிமையியல் நீதிமன்றத்தில் அன்புமணி கூறியிருந்தார். பாமகவில் தந்தை மற்றும் மகன் இடையே மோதல் காரணமாக அக்கட்சி தற்போது இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பாமக பெயர், கொடி சின்னத்தை பயன்படுத்த அன்புமணி ராமதாஸுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கட்சியின் தலைவராக தாம் அறிவிக்கவேண்டும் என்று ராமதாஸ் தரப்பில் ஏற்கனேவே சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே இந்த வழக்கு விசாரித்த உரிமை நீதிமன்றம் இந்த மனு தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் அன்புமணி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது ராமதாஸ் தாக்கல் செய்த இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று அனுப்புமணி தரப்பில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராமதாஸுக்கு தற்போது 87 வயதாகிவிட்டது, வயது, மருத்துவ காரணங்களால் அவர் நிர்வாக முடிவுகளை எடுக்கும் நிலையில் இல்லை. சில தனி நபர்கள் பாமகவுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக அன்புமணி குற்றச்சாட்டை வைத்துள்ளார். ராமதாஸ் தலைவர் என்று அறிவித்துக் கொண்டது பாமகவின் சட்ட விதிகளுக்கு உட்பட்டது அல்ல என்றும் தெரிவித்துள்ளார். நிறுவனர் என்ற அடிப்படையில் கட்சிக்கு ஆலோசனை மட்டுமே ராமதாஸ் தர முடியும் தவிர வேற ஒன்றும் செய்ய முடியாது. அதைபோல் பாமகவின் பொது குழு தான் உச்சபட்ச அதிகாரம் கொண்டதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே ராமதாஸ் தொடர்ந்த வழக்கானது விசாரணைக்கு உகந்தது அல்ல. அதனை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் அன்புமணி மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு தொடர்பாக மார்ச் 11ஆம் தேதிக்குள் ராமதாஸ் பதிலளிக்க உத்தரவிட்டு சென்னை உரிமையியல் நீதிமன்றம் விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.

Related Stories: