மதுரை: போலீசைக் கண்டதும் தப்பி ஓட முயன்று கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்ட வாலிபர், மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். போலீஸ் தாக்கியதால் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றச்சாட்டி உடலை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்தவர் ஜெயக்குமார் (37), ஆதனூரை சேர்ந்தவர் அழகர்சாமி (34). கடந்த 5ம் தேதி இரவு இருவரையும், அரிவாளால் வெட்டி விட்டு 2 பேர் தப்பினர்.
இதன்பேரில் வழக்குப்பதிந்த மானாமதுரை போலீசார், கிருஷ்ணராஜபுரம் காலனியை சேர்ந்த ஆகாஷ் டெலிசன் (26), குணா (23) ஆகியோரை விரட்டிப்பிடித்தனர். இதில் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்ற ஆகாஷ் டெலிசன் தவறி விழுந்ததில் காலில் முறிவு ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது.
மதுரை அரசு மருத்துவமனையில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்திய குடும்பத்தினர், உறவினர்கள் ஆகாஷ் டெலிசன் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி சென்றனர். ஆகாஷின் தாயார் ஆனந்தி கூறுகையில், ‘‘உன் புள்ள கையில கிடைச்சா கொன்னுருவோம்னு போலீசார் சொன்னாங்க. இப்ப கொன்னுட்டாங்க’’ என்றார். அவரது தந்தை ராஜேஷ்கண்ணன் கூறுகையில், ‘‘எனது மகனை ஒரு வழக்கில் கைது செய்ய வேண்டும் என கூறி என்னையும், என் மனைவியையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று வைத்துக் கொண்டனர்.
பின்னர் எனது மகன் கிடைத்து விட்டதாக கூறி எங்களை வீட்டிற்கு அனுப்பினர். பின்னர் எனது மகனுக்கு கால் முறிவு ஏற்பட்டு மானாமதுரையில் சிகிச்சையில் இருப்பதாக தெரிவித்தனர். எனது மனைவி சென்று பார்த்த போது காவல்துறையினர் அடித்ததாக ஆகாஷ் கூறியிருக்கிறார். திடீரென காவல்துறையினர் போன் செய்து மகன் உயிரிழந்து விட்டதாக கூறினர்.
இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று காலில் கற்களை வைத்து அடித்து காலை உடைத்து தாக்கியுள்ளனர். சாதிய ரீதியாக பேசி தாக்குதல் நடத்தியுள்ளனர்’’ என்றார். இந்நிலையில், ஆகாஷ் டேலிசன் உறவினர்கள் நேற்று காலை 9.30 மணிக்கு மதுரை – ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
