விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்து உள்ள நிலையில், விஜய்-திரிஷா ஜோடியாக ஒரு திருமண விழாவுக்கு வந்தது பேசுபொருளாகி விவாதம் நடந்து வருகிறது. திரைபிரபலங்கள் விஜய்க்கு எதிராக பேசி வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனரும், நடிகருமான பார்த்திபன், திரிஷாவை நேரடியாக தாக்கி பேசியுள்ளார். அந்நிகழ்ச்சியில் திரிஷாவின் போட்டோவை பார்த்திபனிடம் காண்பித்து, ‘குந்தவை’ (பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா ஏற்றிருந்த கேரக்டரின் பெயர்) பற்றி உங்களின் கருத்து என்ன?’ என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த பார்த்திபன், ‘இந்த குந்தவையை கொஞ்சநேரம் குந்தவைக்கிறது நல்லது. இந்த குந்தவையை வீட்டுக்குள்ளயே, வெளியில் வராமல் கொஞ்ச நாளைக்கு குந்தவைப்பது நல்லது. நிறைய பிரச்னைகளை ஏற்படுத்தாமல் இருப்பதைவிட வீட்டிலேயே இருக்கலாம். சில கவிதைகளை ரசிக்கலாமே தவிர, அந்த கவிதையை சொல்லாமல் இருப்பதே நல்லது’ என்று சொன்னார். அவர் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
* விவாகரத்து செய்து சந்தோஷமாக வாழ வேண்டும் – மன்னிப்பு கேட்டு பார்த்திபன் வீடியோ
தான் சொன்ன கருத்துக்கு திரிஷா பதிலடி கொடுத்ததால், நேற்றிரவு தனது எக்ஸ் தளத்தில் பார்த்திபன் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் பேசியிருப்பதாவது: எது நடந்ததோ அது தவறாகவே நடந்துள்ளது. இதில் வருந்துவதை தவிர வேறு வழியில்லை. சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், ‘ரேப்பிட் ஃபயர்’ முறையில் கேட்கப்பட்ட 20 கேள்விகளுக்கு சற்றும் யோசிக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது திரிஷா போட்டோ திரையில் வந்ததும் பார்வையாளர்கள், ‘குந்தவை… குந்தவை’ என்று கூச்சலிட்டனர்.
பிறகு வார்த்தை ஜாலத்துக்காக மட்டுமே ‘குந்தவையை வீட்டிலேயே குந்தவைக்கவும், பிரச்னை வராமல் இருக்க’ என்று சொன்னவுடன் அரங்கமே கைத்தட்டியது. மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தவுடன் நண்பர் ஒருவர், ‘குந்தவையை தவிர்த்திருக்கலாம்’ என்று சொன்னவுடன், உடனே நான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை அழைத்து, அதை வெளியிட வேண்டாம் என்று சொன்னேன். ஆனால், பார்வையாளர்களில் யாரோ ஒருவர் எடுத்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
அது சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்காக நான் மனப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். பிரச்னை பெரிதாவதை நான் என்றுமே விரும்ப மாட்டேன். நான் நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது, பெண் சுதந்திரம் குறித்து பேசுகிறேன். ஆண், பெண் பாகுபாடின்றி, தேவையற்ற கட்டுப்பாடுகளின்றி விவாகரத்து செய்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்று சொல்பவன் நான். இவ்வாறு அவர் கூறினார்.
