விஜய் வாக்குறுதி வொர்த் இல்லை: அவர் ஸ்டைலிலேயே முடிச்சுவிட்ட வேல்முருகன்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த ஆவூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திமுக கூட்டணியில் 6 தொகுதி கேட்டிருக்கிறோம். முதல்கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளது. திருச்சி மாநாட்டிற்கு பிறகு 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு, குழு எங்களை அழைப்பார்கள். அப்போது எத்தனை தொகுதிகள் என்பதை நாங்கள் இறுதி செய்வோம். ஆட்சி அதிகாரத்தில் நாங்கள் பங்கு கோரவில்லை. பாமகவில் அப்பா, மகன் பிரச்னை போய்க்கொண்டிருக்கிறது. அதில் நாங்கள் தலையிடவில்லை.

சின்னம்மா கட்சி தொடங்கியிருப்பது அவருடைய உரிமை. மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் எல்லாம் ஒன்று கூடி 4 தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறோம். திமுக தலைமையில் நாங்கள் வெற்றி பெறுவோம். நிதீஷ்குமார் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்பி ஆகிறார். இதுதான் பாஜ மாடல் ஆட்சி. இவ்வாறு அவர் கூறினார். அப்போது நிருபர்கள் பாஜவுடன், தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வருகிறதே? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு, ‘‘விஜய் எந்த மதவாதத்திற்கு எதிராக கட்சி தொடங்கினாரோ அதே கட்சியுடன் கூட்டணி வைத்தால் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பார்கள். கருத்து சொல்லக்கூடிய அளவுக்கு தவெக தேர்தல் வாக்குறுதிகள் வொர்த் இல்லை. விஜய் ஆந்திரா, தமிழ்நாடு ஏனைய மாநிலங்களில் இருந்து அந்தந்த மாநில முதலமைச்சர்கள், கட்சி தலைவர்கள் கொடுத்த தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி வெளியிடுகிறார்.

இன்னும் சொல்லப்போனால் அவர் சொல்லக்கூடிய திட்டங்கள் ஆண்டு ஆண்டுகாலமாக இந்த மண்ணில் நடந்தேறி வருகின்ற திட்டங்கள். இந்த திட்டங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறதா? இல்லையா? என்ற அடிப்படை புரிதல்கூட அவருக்கு இல்லாததைதான் இது காட்டுகிறது. நடிகர் விஜய் சொல்வது போன்று ஒவ்வொரு திருமணமான பெண்ணுக்கும் ஒரு பவுன் சாத்தியமா? பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் அரை பவுன் சாத்தியமா? சாத்தியம் இல்லாததை சொல்கின்ற ஒரு நடிகர்’’ என்றார்.

Related Stories: