பாஜவுக்கு எதிராக சவுமியா கூட்டணியில் சலசலப்பு

கன்னியாகுமரி அருகே உள்ள நாடான்குளம் பகுதியில், மகளிர் தினத்தையொட்டி நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எம்எல்ஏ தளவாய்சுந்தரம், பசுமை தாயகம் அமைப்பாளர் சவுமியா அன்புமணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். சவுமியா அன்புமணி பேசியதாவது: சமீப காலமாக நான் பார்க்கும் ஒரு விஷயம் என்னவென்றால், சிறுமிகள், பெண்கள் பாலியல் வன்கொடுமை நடந்தால் உடனடியாகத் தீர்ப்பு வந்து விடுகிறது. ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உடனே தீர்ப்பு கொடுத்துட்டாங்க.

இப்ப கூட கோவை பாலியல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்தபோது அந்தப் பெண்ணுக்கு உடனடியாக நியாயம் வழங்கப்பட்டு இருக்குது. இப்படி நிறைய விஷயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. எவ்வளவுதான் படிச்சாலும் சரி, எவ்வளவுதான் விழிப்புணர்வோடு இருந்தாலும் சரி, பாதுகாப்பு என்ற ஒரு விஷயம் இல்லைன்னா மறுபடி பெண்கள் எங்க போவாங்க? அந்த காலத்துல குருகுலம் எல்லாம் இருந்தது. ஆண்களுக்குத்தான் படிப்பு, வில்வித்தை பயிற்சி, போர் பயிற்சி, பேசுவதற்குப் பயிற்சி எல்லாமே கொடுத்துட்டு இருந்தாங்க.

குருகுல கல்வி காலத்தில் பெண்களுக்கு படிப்பே கிடையாது. ஆனா இப்போது 50, 70 வருடங்களாக பெண்கள் வெளியில் வந்து போராடி படிச்சி எல்லா துறையிலும் சாதிக்கிறாங்க. பெண்கள் தைரியம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அதற்கு கல்வி தான் முக்கியம். பெண் குழந்தைகளுக்கு மட்டுமின்றி ஆண் குழந்தைகளுக்கும் ஒழுக்கத்தை கற்று கொடுங்கள் என்றார்.

குருகுல கல்வி சிறந்தது என்று அதிமுக கூட்டணியில் உள்ள பா.ஜ. கூறி வரும் நிலையில், குருகுல கல்வி காலத்தில் பெண்கள் படிக்கவே இல்லை. அடிமையாக இருந்தார்கள் என்று தாக்கியும், பாலியல் வழக்கில் உடனடி தீர்ப்பு பற்றி பாராட்டியும் சவுமியா அன்புமணி பேசியது கூட்டணிக்குள் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

Related Stories: