திமுகவிடம் எந்தெந்த தொகுதிகளை கேட்டுப் பெறுவது என்பது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற தேர்தலுக்கான அகில இந்திய காங்கிரஸ் மூத்த பார்வையாளர் முகுல் வாஸ்னிக் மற்றும் குவாசி முகமது நிஜாமுதீன் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்திற்கு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தேசிய செயலாளர் நிவேதித் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் எம்பிக்கள் கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த், சசிகாந்த் செந்தில், எம்எல்ஏக்கள் ரூபி மனோகரன், துரை சந்திரசேகர், மூத்த தலைவர்கள் பீட்டர் அல்போன்ஸ், கே.ஆர்.ராமசாமி, மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், பொதுச்செயலாளர் பி.வி.தமிழ்செல்வன், எஸ்.சி.துறை மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார், மகளிரணி தலைவி ஹசீனா சையத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் முகுல் வாஸ்னிக் அளித்த பேட்டியில், ‘‘நாங்கள் வலிமையான கூட்டணியை அமைத்துள்ளோம். தமிழ்நாட்டின் மக்கள் எங்களை நம்புவார்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. எங்களுக்கு எதிராக யார் வேண்டும் என்றாலும் இருக்கட்டும். அவர்களை மக்கள் ஆதரிப்பார்கள் என்கிற நம்பிக்கை இல்லை. எங்கள் தலைவர்கள் தமிழகத்தில் முன்னணி பிரசாரங்களில் ஈடுபடுவார்கள். அதே நேரத்தில் பாஜ தலைவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் வரலாம், அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், மக்கள் பாஜவின் பக்கம் செல்லமாட்டார்கள்’’ என்றார்.
