சட்டமன்ற தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள துணை ஆட்சியர், துணை தாசில்தார், உதவியாளர் உள்பட 1249 கூடுதல் பணியிடங்கள்: தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு

 

சென்னை: சட்டமன்ற தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள துணை ஆட்சியர், துணை தாசில்தார், உதவியாளர் உள்பட 1249 கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய, ஐந்து மாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 26, 27ம் தேதிகளில் தமிழகம் வந்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலாளர், டிஜிபி, உள்ளிட்ட அரசு அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இதே போல தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களிலும் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது. இந்த ஆலோசனை பணிகள் அனைத்தும் முடிந்ததும் ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணை இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும். அனேகமாக வரும் 15 அல்லது 16ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. வழக்கமாக தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஏப்ரல் 2வது அல்லது 3வது வாரத்தில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் தொடர்பான பணிகள் அதிகரிக்கும். இதையடுத்து அந்த பணிகளை மேற்கொள்ள கூடுதல் அதிகாரிகளை பணியமர்த்தும் வகையில் 1,249 கூடுதல் பணியிடங்களை உருவாக்கி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அரசாணை வெளியிட்டுள்ளார். இதன்படி, துணை ஆட்சியர், துணை தாசில்தார், உதவியாளர், இளநிலை உதவியாளர், கணக்காளர், தட்டச்சர் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களில் உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் காலத்தில், மாதிரி நடத்தை விதிகளை அமல்படுத்துதல், தேர்தல் அலுவலர்களுக்கு பல்வேறு வகையான பயிற்சிகளை அளித்தல், பதற்றமான வாக்குச் சாவடிகளை கண்டறிதல், மாவட்ட தேர்தல் மேலாண்மை திட்டத்தை உருவாக்குதல், பல்வேறு தேர்தல் பணிகள் தொடர்பாக தினசரி அறிக்கை தயாரித்தல், வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள இந்த பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் அனைத்தும் ஜூன் 30ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: