உலக நாடுகளுடன் போட்டிப்போடும் தமிழ்நாடு 4 ஆண்டில் 11.19% இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: மேலும் வளர்ச்சியடைய 5 ஆண்டு திமுக ஆட்சி தொடர வேண்டும்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: உலக நாடுகளுடன் போட்டி போடும் தமிழ்நாடு, 4 ஆண்டுகளிலேயே 11.19 சதவீத என்கிற இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் வளர்ச்சியடைய இன்னும் 5 ஆண்டுகாலம் திமுக ஆட்சி தொடர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ‘All roads leads to rome’ என்று சொல்வார்கள். எல்லாச் சாலைகளும் ரோமாபுரி நோக்கிச் செல்கின்றன என்பது போல, எல்லாச் சாலைகளும் இப்போது மலைக்கோட்டை மாநகராம் திருச்சியை நோக்கியே பயணிக்கின்றன.

திமுக முதன்மைச் செயலாளர், அமைச்சர் கே.என்.நேருடன் நிர்வாகிகளும் இணைந்து நின்று ‘ஸ்டாலின் தொடரட்டும் – தமிழ்நாடு வெல்லட்டும்‘ எனும் நிர்வாகிகளின் தேர்தல் சந்திப்பு சிறப்பு மாநாட்டிற்கான ஏற்பாடுகளை எழுச்சியோடும் ஏற்றத்தோடும் செய்து வரும் நிலையில், மாவட்ட- ஒன்றிய – நகர- பேரூர் -கிளை நிர்வாகிகள் அனைவரும், கழகத்தின் அனைத்து அணிகளின் நிர்வாகிகளும் திமுகவின் வெற்றிக்கான தேர்தல் பணிகளை முன்னெடுத்துப் பணியாற்றி வரும் நிர்வாகிகளும் திருச்சி நோக்கிய பயணத்திற்கு ஆயத்தமாகி வரும் வேளையில், உங்களில் ஒருவனான நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைத்திடும் உறுதியுடன் 2026 தேர்தல் களத்தில் பணியாற்றுவதற்கான பாசறையாக விளங்கிடும் இந்த மாநாடு, நடைபெறும் இடம் சிறுகனூர். பெருகி வரப்போகும் கருப்பு – சிவப்பு உடன்பிறப்புகளின் அலை அலையான அணிவகுப்பு, மார்ச் 9 அன்று சிறுகனூரில் பெருங்கடலாகக் காட்சியளிக்கும். 70 ஆண்டுகளுக்கு முன், ‘அன்பில் அழைக்கிறார்’ என 1956ம் ஆண்டு திருச்சியில் நடந்த இரண்டாவது மாநில மாநாட்டிற்கு கழக தம்பிகளுக்கு அழைப்பு விடுத்துக் கடிதம் எழுதினார் அண்ணா. ‘தம்பி வா.. தலைமையேற்க வா’ என மாநாட்டு தலைமைக்கு நாவலர் முன்மொழிந்து அண்ணா ஆற்றிய உரையும்,

அந்த மாநாட்டுப் பந்தலில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான திமுக தொண்டர்களிடம், தேர்தலில் திராவிட முன்னனேற்றக் கழகம் போட்டியிடலாமா வேண்டாமா என உட்கட்சி ஜனநாயகத்துடன் வாக்கெடுப்பு நடத்தி, பெருவாரியான தொண்டர்கள், தேர்தலில் கழகம் போட்டியிட வேண்டும் என்று வாக்களித்ததன் அடிப்படையில், தீர்மானம் நிறைவேற்றி, 1957ல் முதல் முறையாக தேர்தல் களம் கண்டது நம் லட்சிய இயக்கமாம் திமுக. காஞ்சியிலே அண்ணா வெற்றி பெற்றுச் சட்டமன்றம் சென்றார். எழும்பூரிலே இனமான பேராசிரியரும், பெரம்பூரிலே சத்தியவாணிமுத்து அம்மையாரும் என கழகத்தின் சார்பில் முதன்முறையாக 15 பேர் சட்டமன்றத்திற்கும் இரண்டு பேர் நாடாளுமன்றத்திற்கும் சென்றனர்.

எந்த திருச்சியிலே நடந்த மாநாட்டில் கழகம் தேர்தல் களம் காண்பது என தீர்மானிக்கப்பட்டதோ, அந்த திருச்சி மாவட்டத்தில் அன்று இடம்பெற்றிருந்த குளித்தலை தொகுதியில் வெற்றி வாகை சூடியவர் நம் உயிர்நிகர் கலைஞர். திமுக வரலாற்றில் திருச்சி மாநாடு திருப்புமுனையாக அமைந்தது. அண்ணா மறைவுக்குப் பிறகு இயக்கத்தையும் ஆட்சியையும் தன் தோள்களில் சுமந்த கலைஞர், 1970ம் ஆண்டு பிப்ரவரி 22ம் நாள் திருச்சியில் நடந்த மாநாட்டில்தான், நம் கொள்கைகளை ஒவ்வொரு தொண்டரும் ஓங்கி ஒலிக்கும் வகையில், ஐம்பெரும் முழக்கங்களை வழங்கினார்.

அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்பதுதான் முதல் முழக்கம். அண்ணாவின் அறவழியில் உழைத்து, ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்திடவும், இந்தித் திணிப்பை என்றும் எதிர்த்துத் தாய்த் தமிழைக் காத்திடவும், வன்முறை தவிர்த்து வறுமையை வென்றிடும் வகையில் மாநிலத்தில் சுயாட்சியையும், மத்தியில் கூட்டாட்சியையும் கொண்ட உண்மையான வலிமைமிக்க இந்திய ஒன்றியத்தை உருவாக்கிடவும் உறுதியேற்கும் வகையில் அந்த ஐம்பெரும் முழக்கங்கள் அமைந்துள்ளன. நம் கொள்கைப் பாதையில் மேற்கொள்ளும் லட்சியப் பயணத்தில் உயிர்மூச்சாக இருப்பவை நம் உயிர்நிகர் தலைவர் திருச்சி மாநாட்டிலே வழங்கிய ஐம்பெரும் முழக்கங்களே.

ரயில்வே கோட்டத்தின் நுழைவாயிலின் பெயரில் இந்தியைத் திணிக்கும் வேலையைச் செய்தபோது, திருச்சி மாவட்ட கழகத்தினர் பொங்கி எழுந்து எதிர்ப்புணர்வைக் காட்டிய காரணத்தால், அங்கே இந்தி அகன்றது. தமிழ் நிலைத்து நின்றது. பெருமைமிகு திருச்சியில் 1978ம் ஆண்டிலும், 1986ம் ஆண்டிலும் இந்தி எதிர்ப்பு மாநாட்டை நடத்தி ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்புணர்வை காட்டியவர் நம் உயிர்நிகர் கலைஞர்.

பவள விழா கண்ட பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் திருச்சியில் நடந்த மாநாடுகள் திருப்புமுனைகளாக அமைந்திருக்கின்றன. திராவிட மாடல் அரசு 4 ஆண்டுகளிலேயே, இந்தியாவிலேயே 11.19 சதவீத என்கிற இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியைப் பெற்றே ஒரே மாநிலமாக, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எந்தப் பங்களிப்பையும் செய்யாமல் வஞ்சிக்கின்ற ஒன்றிய அரசினாலேயே உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அடுத்த 5 ஆண்டுகாலம் தொடரப்போகும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்குவதுடன், சர்வதேசத் தரத்துடன் உலக நாடுகளுடன் போட்டி போடக்கூடிய அளவுக்கான வளர்ச்சியை நிச்சயம் பெற்றிருக்கும். உங்களைக் காணும்போது என் உழைப்பின் ஆற்றல் மேலும் பெருகும். எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். வரலாற்று வெற்றியைப் படைக்க வருக உடன்பிறப்பே திருச்சி குலுங்கட்டும், தி.மு.க வெல்லட்டும்.. சிறுகனூர் மாநாடு வரலாறு படைக்கட்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: