5 பஸ்கள் 66 முறை இயக்கப்படுகின்றன ஓவேலி பேரூராட்சி முழுவதும் பயன்தரும் மகளிர் இலவச பேருந்து

*தினசரி பயணச் செலவு குறைந்துள்ளதாக பெண்கள் மகிழ்ச்சி

கூடலூர் : ஓவேலி பேரூராட்சியில் இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் மகளிருக்கான கட்டணமில்லா இலவச பேருந்தாக இயக்கப்படுகிறது. இதனால், தினசரி பயணச் செலவு குறைந்துள்ளதாக பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு போக்குவரத்துக் கழகத்திலிருந்து கூடலூரின் பல்வேறு பகுதிகளுக்கும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், உள்ளூர் பகுதிகளில் இயக்கப்படும் மகளிர் இலவச பேருந்துகளால் ஓவேலி பேரூராட்சியில் வசிக்கும் மகளிர் முழுமையாக பயனடைந்து வருகின்றனர்.

கூடலூர் அரசு போக்குவரத்துக் கழக கிளையில் இருந்து ஓவேலி, தேவர் சோலை பேரூராட்சிகள், ஸ்ரீமதுரை ஊராட்சி மற்றும் கரியசோலை, மாயார் பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் மகளிர் இலவச பயண பேருந்துகளும் அடங்கும்.

இதில், ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர் பகுதிக்கு ஒரு பேருந்து 20 நடை, ஆருற்றுப் பாறை பகுதிக்கு ஒரு பேருந்து 18 நடை, பெரிய சோலை பகுதிக்கு 2 பேருந்துகள் 16 நடை, மூலக்காடு பகுதிக்கு ஒரு பேருந்து 12 நடை என தினசரி 66 நடைகள் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்தப் பேருந்துகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் சம்பந்தப்பட்ட ஊர்களில் இருந்து கூடலூர் மற்றும் பிற பகுதிகளுக்கு கூலி வேலைக்கு செல்லும் ஏராளமான பெண் தொழிலாளர்கள் பயணம் செய்கின்றனர். மேலும் தனியார் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பணிபுரியும் பெண்களும் இந்த பேருந்துகளை பயன்படுத்துகின்றனர்.

கூடலூர் அரசு போக்குவரத்துக் கழக கிளையில் இருந்து ஓவேலி பேரூராட்சிக்கு இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் மகளிர் இலவச பயண பேருந்துகள் ஆகும். இதன் மூலம் ஒரு பேரூராட்சி முழுவதும் வசிக்கும் பெண்கள் மகளிர் இலவச பேருந்து பயணத்தால் பயனடைந்து வருகின்றனர்.

தினசரி சுமார் 1,500க்கும் மேற்பட்ட மகளிர் இந்த பேருந்துகளில் பயணம் செய்து பலனடைந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் பேரூராட்சி முழுவதும் இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் மகளிருக்கான கட்டணமில்லா இலவச பேருந்தாக இயக்கப்படுகிறது என்றால் அந்த பேரூராட்சி ஓவேலி பேரூராட்சி மட்டுமே ஆகும்.

ஆரூற்றுப்பாறையை சேர்ந்த குடும்ப தலைவியான சஜி ரேணுகா கூறும்போது: ‘‘இலவச பேருந்து பயணம் எங்கள் பகுதி பெண்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது. இங்குள்ள பெரும்பாலானவர்கள் சிறு விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களாக உள்ளனர்.

இங்கிருந்து வெளியிடங்களுக்கு சென்று வேலை செய்பவர்கள் தினசரி ஒரு தொகையை போக்குவரத்துக்காக செலவு செய்ய வேண்டியுள்ளது. பேருந்தை தவிர்த்து தனியார் வாகனங்களில் செல்லும்போது கட்டணம் மூன்று மடங்காக உள்ளது. தற்போது இலவச பேருந்து பயணத்தால் பெண் தொழிலாளர்களின் தினசரி பயணச் செலவு குறைந்துள்ளது.

இதனால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாதத்தில் அவர்களுக்கு ரூபாய் 500 முதல் 1000 வரை செலவு குறைகிறது. இதை அவர்களது குடும்பத்தின் மற்ற செலவுகளுக்கோ அல்லது சேமிப்புகளுக்கு பயன்படுத்த முடியும்’’ என்றார்.

காந்திநகரை சேர்ந்த கூலித் தொழிலாளி சரஸ்வதி கூறும்போது: ‘‘கூலித் தொழில் செய்யும் எங்களைப் போன்ற பெண்கள் தினசரி இங்கிருந்து வெளியிடங்களுக்கு பேருந்து மற்றும் தனியார் ஜீப்புகளில் பயணம் செய்து பணி செய்து வருகிறோம். பேருந்து கட்டணம் பெண்களுக்கு இலவசமாக்கப்பட்டுள்ளதால் எங்களது வருமானத்தில் சேமிப்பு செய்ய முடிகிறது.

பல்வேறு அவசர அத்தியாவசிய தேவைகளுக்காக இந்த பகுதிகளில் இருந்து கூடலூர் நகருக்கு செல்லும் பெண்களுக்கு மிகவும் உதவியாக அமைந்துள்ளது. நாங்கள் வசிக்கும் ஓவேலி பேரூராட்சியில் பெரும்பாலான சாதாரண குடிமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பேரூராட்சியில் அனைத்து பகுதிகளுக்கும் இலவச பேருந்து வந்து செல்வதால் இந்த பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது’’ என்றார்.

Related Stories: