*எம்எல்ஏ மு.பெ.கிரி திறந்து வைத்தார்
செங்கம் : செங்கம் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட அரசு கட்டிடங்களை எம்எல்ஏ மு.பெ.கிரி திறந்து வைத்தார்.செங்கம் அடுத்த புதிய குயிலம், ஆலப்புத்தூர், புதுப்பட்டு, பரமனந்தல், கொட்டாவூர் ஆகிய ஊராட்சிகளில் கட்டி முடிக்கப்பட்ட புதிய நியாய விலை கடைகள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள், அங்கன்வாடி மைய கட்டிடங்கள், பயணியர் நிழல் கூடங்கள் உள்ளிட்டவை எம்எல்ஏ மு.பெ.கிரி, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், புதிதாக திறக்கப்பட்ட நியாய விலை கடையில், பயனாளிகளுக்கு அரிசி, சர்க்கரை அடங்கிய தொகுப்பை வழங்கினார்.
அப்போது எம்எல்ஏ மு.பெ.கிரி பேசியதாவது: தமிழ்நாட்டில் நீண்ட நாட்களாக பழைய கட்டிடங்கள் மற்றும் தனியார் கட்டிடங்களில் இயங்கி வந்த நியாய விலை கடை, அங்கன்வாடி மையம், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், பயணியர் நிழல் கூடம் உள்ளிட்டவை மக்கள் கோரிக்கையாக இருந்து வந்தது.
அதன்படி மக்களின் கோரிக்கைகளை ஏற்று, புதிய கட்டிடங்கள் அமைத்து அங்கன்வாடி மைய குழந்தைகளின் பயன்பாட்டிற்கும், குடும்ப அட்டைதாரர்கள் தடையின்றி ரேஷன் பொருள்கள் பெறுவதற்கும், புதிய நியாய விலை கட்டிடங்கள், பயணிகள் பேருந்தில் நின்று செல்வதற்கு நிழல் கூடம் மற்றும் ஊராட்சி மன்ற கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மத்திய ஒன்றிய செயலாளர்கள் ஏழுமலை, செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட பிரதிநிதி பாண்டியன், அணி நிர்வாகிகள் கலைச்செல்வன், சதீஷ், அறிவழகன், வெங்கடேசன் மற்றும் திமுக மூத்த முன்னோடிகள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
