அமமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பெரம்பூர்: வியாசர்பாடியில் அமமுக நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய, சகோதரர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடி இந்திரா காந்தி நகர் மெயின் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (47), அதே பகுதியில் அத்தோ கடை நடத்தி வருகிறார். மேலும், அமமுகவில் பெரம்பூர் துணை பகுதி செயலாளராக உள்ளார். நேற்று அதிகாலை 3 மணியளவில், இவரது வீட்டின் வெளியே பாட்டில் உடையும் சத்தம் கேட்டுள்ளது.

உடனே பாலமுருகனின் அண்ணன் ரவி என்பவர் வெளியே ஓடிவந்து பார்த்தபோது, அங்கு பீர்பாட்டில் உடைந்து தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அதனை ஒருவர் செல்போனில் போட்டோ எடுத்துவிட்டு தப்பினார். அதிர்ச்சியடைந்த ரவி மற்றும் குடும்பத்தினர், விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். பின்னர் இதுகுறித்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், இரவு ரோந்து பணியில் இருந்த அண்ணாநகர் துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் ரமேஷ் பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.

அதில், வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இதையடுத்து, எம்கேபி நகர் உதவி கமிஷனர் சரவணன் தலைமையில், இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, பாலமுருகனிடம் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து விசாரித்தனர். அதில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு பாலமுருகன் நடத்தி வரும் அத்தோ கடைக்கு வந்த தனுஷ்ராஜ், மோனிஷ் ராஜ் ஆகியோர் உனவு சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் சென்றுள்ளனர். அவர்களிடம் பாலமுருகன் பணம் கேட்டுள்ளார்.

அப்போது, இருவரும் பணம் தர மறுத்து, தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கடையின் அருகே நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்களை உதைத்து கீழே தள்ளிவிட்டு சென்றுள்ளனர். பின்னர், இவர்கள் தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலமுருகன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வியாசர்பாடி கருணாநிதி சாலை 4வது தெருவை சேர்ந்த தனுஷ் ராஜ் (19), இவரது அண்ணன் மோனிஷ் ராஜ் (20), வியாசர்பாடி எஸ்ஏ காலனியை சேர்ந்த சந்தோஷ் (19), புளியந்தோப்பு ஆடுதொட்டி பகுதியை சேர்ந்த ஸ்டீபன் (எ) சேட்டு (21) ஆகியோரை கைது செய்தனர்.

அப்போது, போலீசாரிடமிருந்து தப்ப முயன்ற தனுஷ் ராஜ், சேட்டு ஆகியோர் கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் இருவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், எம்கேபி நகர் போலீசார் வழக்கு பதிந்து 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: