தர்மபுரி: தர்மபுரி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை கழுத்தறுத்துக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே ஜெல்திம்மனூர் பகுதியை சேர்ந்தவர் பாக்யராஜ்(35). விவசாயி. இவரது மனைவி நிவேதிதா (33). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டு ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். அதே ஊரை சேர்ந்த சிவகுரு (35), கூலி தொழிலாளி. இவருக்கும், நிவேதிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனை அறிந்த கணவர் பாக்யராஜ் கண்டித்து தவறான தொடர்பை துண்டித்து கொள்ளுமாறு எச்சரித்துள்ளார்.
ஆனால் இதனை கண்டுகொள்ளாத நிவேதிதா தொடர்ந்து சிவகுருவுடன் பேசி பழகி வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் நிவேதிதா கோபித்துக்கொண்டு அவரின் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த 2 வாரத்துக்கு முன் ஊர் பெரியவர்கள் முன் சமாதானம் பேசி மனைவியை குடும்பம் நடத்த வீட்டுக்கு பாக்யராஜ் அழைத்து வந்துள்ளார். இதனிடையே நேற்று இரவு படுக்கையறையில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆவேசம் அடைந்த பாக்யராஜ் நிவேதிதாவின் கழுத்தை அரிவாளால் அறுத்துக்கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இன்று காலை பாக்யராஜின் தந்தை ராஜாமேனி வீட்டிற்கு வந்தார். அவர் படுக்கை அறையை திறந்து பார்த்த போது உள்ளே நிவேதிதா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை பாக்யராஜ் கொலை செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், ஊரில் பதுங்கி இருந்த பாக்யராஜை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
