தமிழகத்தில் வலிமையான கட்சியாக இருந்துவந்த அதிமுக, ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு பல சரிவை கண்டு வருகிறது. குறிப்பாக அக்கட்சிக்கு எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு கூட்டணி முடிவு எடுப்பதிலும், கட்சி ஒருங்கிணைப்பு, கட்டமைப்பதற்கான நடவடிக்கையை சரியாக கையாளவில்லை என்று அக்கட்சியினரே குற்றம்சாட்டுகின்றனர். இதன் காரணமாகவே அதிமுகவை கரையான் போல் பாஜ அரித்து வருகிறது. அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் சரியான கூட்டணி அமைக்கவில்லை என்று இபிஎஸ் மீது வெளிப்படையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தனது சுயநலத்திற்காக கட்சியில் பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்கவில்லை. இதனால் கட்சியின் எதிர்காலத்தைவிட தனது சுயநலத்தை பார்ப்பதாகவும் இபிஎஸ்மீது தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மற்றொருபுறம், அதிமுகவில் பெண் தலைவர்களையும் ஓரங்கட்டிவிட்டதாக இபிஎஸ் மீது பல்வேறு மாவட்டங்களில் உள்ள பெண் தலைவர்களின் ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘ஜெயலலிதா இருக்கும்வரை பெண் தலைமை நிர்வாகிகளை தாண்டிதான் ஐவர் குழுவாக இருந்தாலும், மூத்த நிர்வாகியாக இருந்தாலும் செல்வார்கள். அப்படித்தான் மகளிர்களில் சரோஜா, வளர்மதி, கோகுலஇந்திரா, செல்விராமஜெயம், ராஜலட்சுமி, மனோரஞ்சிதம், சரஸ்வதி, முத்துசெல்வி உள்ளிட்ட பல பெண் தலைமை நிர்வாகிகள் இருந்தனர். ஆனால் தற்போது இபிஎஸ் கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதிலிருந்து பெண் தலைமை நிர்வாகிகளை ஓரங்கட்டியே வைத்துள்ளார். கட்சி நிகழ்ச்சி, பிரஸ்மீட் என எந்தவொரு இடத்திலும் பெண் தலைமை நிர்வாகிகள் பின்வரிசைக்குதான் தள்ளப்படுகின்றனர்.
ஆனால் ஜெயலலிதா இருக்கும்போது நாங்கள் பவுர்புல்லாக இருந்தோம். மகளிர்கள் மத்தியிலும் இது கட்சிக்கு பெரும் ஆதரவையும், தேர்தலில் மகளிர்கள் வாக்குகளையும் பெற்றுதருவதற்கு ஏதுவாக இருந்தது. பெயரளவில் வளர்மதியை மட்டும் உடன் வைத்துகொண்டு அரசியல் நடத்துகிறார். மற்ற பெண் தலைமை நிர்வாகிகள் இருந்த இடம்தெரியாமல் போய்விட்டனர். இந்த அதிருப்தி காரணமாகத்தான் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த மாஜி அமைச்சர் நிலோபர்கபிலும் ஆளுங்கட்சிக்கு சென்றுவிட்டார். தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக, கட்சியிலும், ஆட்சியிலும் மகளிர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
பெண்களுக்கு அவர்கள் பெயரிலேயே பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. ஆனால் அதிமுகவில் இதற்கு தலைகீழாக பெண்களை புறக்கணித்து கட்சியை வழிநடத்தி வருகின்றனர். இதனை பார்த்து மக்கள் எப்படி வாக்களிப்பார்கள். இதைபார்த்தாவது இபிஎஸ் இனிமேலும் சுயநலத்தை விட கட்சியின் எதிர்கால நலனை கருத்தில்கொண்டு ஜெ பாணியில் மகளிருக்கும் முக்கியத்துவம் கொடுத்து, மூத்த பெண் நிர்வாகிகளை மதித்து கட்சியை வழிநடத்தி செல்ல வேண்டும்’ என ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர்.
* ஒற்றுமையே நமது பலம்: தனி நபர்களை விட காங்கிரஸே பெரியது; மாணிக்கம் தாகூர் பதிவு
திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் முக்கிய அரசியல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ஒரு ஜனநாயக இயக்கத்தில் கூட்டணி குறித்தோ அல்லது தொகுதிகள் குறித்தோ தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம். அது அந்தந்த நபர்களின் தனிப்பட்ட பார்வையாக இருக்கலாம். தனிநபர்களை விட பேரியக்கமான காங்கிரஸே பெரியது. நமது அகில இந்திய தலைமை ஒரு முடிவை எடுக்கும்போது, அதனை முழுமையான ஒழுக்கத்துடன் ஏற்றுக்கொள்வதே ஒரு உண்மையான தொண்டனின் கடமை. தலைமையின் முடிவுக்குக் கட்டுப்பட்டு நடப்பதே நமது அரசியல் அறம். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு இடமளிக்காத வகையில், காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் தலைமையின் வழிகாட்டுதலின்படி ஒற்றுமையுடன் தேர்தல் களப்பணியாற்ற வேண்டும். ஒற்றுமையே நமது பலம்’’ என்று தெரிவித்துள்ளார்.
