மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடும் சரிவைச் சந்தித்தன. ஒரே நாளில் முதலீட்டாளர்கள் ரூ.10 லட்சம் கோடியை இழந்தனர். ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் காணப்படுகிறது. இதனால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. கடந்த 2ம் தேதி வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 80,239 புள்ளிகளாக இருந்தது. நேற்று காலை 78,529 புள்ளிகள் என சரிவுடனேயே துவங்கியது. அதிகபட்சமாக 79,527 புள்ளிகள் வரை சென்றது. 78,443 புள்ளிகள் வரை சரிந்தது. அதாவது, வர்த்தக இடையில் 1,796 புள்ளிகள் வரை சரிந்தது. இதனால் முதலீட்டாளர்கள் ரூ.11 லட்சம் கோடியை இழந்தனர். பின்னர் மாலை வர்த்தகம் முடியும் நிலையில் சிறிது ஏற்றம் பெற்று, 1,123 புள்ளிகள் சரிந்து 79,116 புள்ளிகளாக இருந்தது.
இதேபோல், தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிப்டி, 385 புள்ளிகள் சரிந்து 24,480 புள்ளிகளாக இருந்தது. இதன்மூலம் நேற்று ஒரே நாளில் பங்குகளின் மதிப்பு ரூ.4,56,90,693 ல் இருந்து ரூ.9,72,450 கோடி சரிந்து, ரூ.4,47,18,243 ஆக இருந்தது. கடந்த மாதம் 27ம் தேதி முதல் 3 வர்த்தக நாட்களில் ரூ.21,31,031 கோடியை முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையான போர் காரணமாக ஏற்பட்டுள்ள பதற்ற நிலையால், முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கத் துவங்கியுள்ளனர். மேலும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.
நேற்று சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஸ்பாட் விலை அதிகபட்சமாக 84.47 டாலர் வரை சென்றது. சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தன்மையற்ற நிலை உருவாகியுள்ளது. வெளிநாட்டு நிறுவன பங்கு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் இருந்து கடந்த திங்கட்கிழமை ரூ.3,295.64 கோடியை வெளியேற்றினர். இவையே பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகிறது. சர்வதேச சந்தைகள் கடும் சரிவை சந்தித்த நிலையில், இந்திய பங்குச் சந்தையிலும் இது எதிரொலித்துள்ளது என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
* இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு
ஈரான் போர் உள்ளிட்ட காரணங்களால் இந்திய ரூபாய் மதிப்பு நேற்று வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. நேற்று காலை வர்த்தகம் துவங்கியபோது அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.92.05 ஆக இருந்தது. அதிகபட்சமாக ரூ.92.35 வரை சரிவை சந்தித்தது. வர்த்தக முடிவில் முந்தைய வர்த்தக நாளில் இருந்த மதிப்பை விட 67 காசுகள் சரிந்து ரூ.92.16 ஆனது. கடந்த திங்கட் கிழமை ரூபாய் மதிப்பு 41 காசுகள் சரிந்து 91.49 ஆக இருந்தது. ஒன்றிய பாஜ ஆட்சிக்கு வரும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.61 ஆக இருந்தது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே ரூபாய் மதிப்பு கடும் சரிவை சந்தித்து வருகிறது.
