அமைச்சர சமாளிக்க முடியாது… வேண்டவே வேண்டாம் திருவெறும்பூர் தொகுதி: தெறித்து ஓடும் அதிமுக மாஜி வேட்பாளர்

திருச்சி: திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார். 2 முறை திருச்சி மக்களவை தொகுதி எம்பியாக இருந்தவர். கடந்த முறை திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டு அமைச்சர் அன்பில் மகேஷிடம் தோல்வியை தழுவினார். இந்த முறை அவர், தனது சொந்த தொகுதியான திருவெறும்பூர் தொகுதியை விட்டு விட்டு மணப்பாறையில் போட்டியிட நினைக்கிறாராம். அமைச்சர் அன்பில் மகேஷிடம் போட்டியிட்டு கரையேற முடியாது. மணப்பாறை தொகுதி பாதுகாப்பாக இருக்கும் என அவர் கருதுகிறாராம். ஆனால் கட்சி தலைமை, மணப்பாறை தொகுதியை ப.குமாருக்கு தர மறுக்கிறதாம். அதிமுக சார்பில் மணப்பாறையில் டாக்டர் ஒருவரை நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும், இதனால் ப.குமார் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, திருவெறும்பூர் தொகுதியில் ஆறு, கால்வாய் தூர்வாரும் பணிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளும் நடந்துள்ளது. இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. ஏராளமான கலைஞர் இல்ல வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. தவிர முக்கிய தேர்தல் வாக்குறுதியான சூரியூரில் ஜல்லிக்கட்டு அரங்கத்தை அமைச்சர் கட்டி கொடுத்துள்ளார். நவல்பட்டு பகுதியில் உள்ள ஐடி பார்க்குக்கு சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது. தொகுதி முழுவதும் மின் விளக்கு, குடிநீர் என பல்வேறு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் சுமார் 49,697 வாக்குகள் வித்தியாசத்தில் அமைச்சர் அன்பில் மகேஷிடம், ப.குமார் தோல்வியடைந்தார். இந்த 5 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதால் தொகுதி மக்களிடம் அமைச்சர் அன்பில் மகேசுக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. எனவே அமைச்சரை சமாளிக்க முடியாது என்பதால் ப.குமார் தொகுதி மாற நினைக்கிறார் என்றனர்.

Related Stories: