சென்னை: அதிமுக சார்பில் போட்டியிடும் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் யார்? என்பது குறித்து முடிவு செய்ய எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை ஆலோசனை நடைபெறுகிறது. சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் கூட்டணி கட்சிகளை இணைப்பது, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உள்ளிட்ட நடவடிக்கைகளில் அதிமுக, பாஜக தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இதுவரை பாமக, அமமுக தவிர வேறு எந்த ஒரு பெரிய கட்சிகளும் சேரவில்லை.
தமிழக பாஜக பொறுப்பாளராக உள்ள ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் எடப்பாடி பழனிசாமி உடன் ஆலோசனை மேற்கொண்டார். அதிமுக பாஜக கூட்டணியை பலப்படுத்துவது, தற்போதைய அரசியல் கள நிலவரம் குறித்தும், அதிமுக – பாஜக நிர்வாகிகள் கூட்டாக சேர்ந்து தேர்தல் நேரத்தில் பணியாற்றுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளபட்டது. ஆனால், இந்த ஆலோசனை கூட்டத்தில், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து இருந்தார். எனினும் பாஜக – அதிமுக தலைவர்கள் இடையே மறைமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்துகொண்டு தான் உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் சார்பில் கடந்த 9ம் தேதி பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அதன்பிறகு, மோடி உத்தரவின் பேரில் பியூஸ் கோயல் எடப்பாடி பழனிசாமி உடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து ஆலோசனை நடத்தினார். ஆனால், இதில் எந்த ஒரு உடன்பாடும் ஏற்படாததால் எடப்பாடி பழனிசாமியை உடனடியாக டெல்லி வரும்படி அமித்ஷா கேட்டுக் கொண்டார். அவரின் அழைப்பை ஏற்று எடப்பாடி நேற்று முன்தினம் டெல்லி சென்றார். அப்போது, அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, யார் யாருக்கு எவ்வளவு தொகுதி வழங்க வேண்டும், 2 மாநிலங்களவை சீட் யாருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று அமித்ஷா சில உத்தரவுகளை எடப்பாடிக்கு விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழலில், அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து அதிமுக மாவட்ட செயலாளர்களும் பங்கேற்க வேண்டும் என்று கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடையும் நிலையில், யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
இதில், மாநிலங்களவை எம்பி தேர்தலில் அதிமுகவுக்கு 2 இடங்கள் இருக்கின்றன. இதில் ஒரு இடம் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மீதம் இருக்கும் ஒரு இடம் தம்பிதுரைக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா? அல்லது புதுமுக வேட்பாளர் அறிவிக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு அதிமுகவினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும். இதனால் இன்றைய கூட்டம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
