புதுடெல்லி: மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் சூழலால் சர்வதேச அளவில் 21,000 விமானங்கள் முடக்கப்பட்ட நிலையில், பயணக் கட்டணம் 1000% உயர்ந்துள்ளதால் வளைகுடா நாடுகளில் சிக்கிய மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஈரான் நாட்டின் முக்கிய நகரங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இன்றுடன் 5வது நாளாக ஒருங்கிணைந்த வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்த அதிரடி தாக்குதலில் ஈரானின் ராணுவ கட்டுப்பாட்டு மையங்கள், ஏவுகணை தளங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்பட்டன. இதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகள் உயிரிழந்ததால், இதற்கு பதிலடியாக ஈரான் நாடு, இஸ்ரேல், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதால் அங்கு பெரும் போர் பதற்றம் நிலவி வருகிறது. இன்று மட்டும் சுமார் 700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் இதுவரை 21,000 விமானங்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக துபாய், தோஹா மற்றும் அபுதாபி ஆகிய முக்கிய நகரங்களின் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், பல்லாயிரக்கணக்கான பயணிகள் தங்களின் பயணத்தை தொடர முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த வான்வெளி பயண சிக்கலால் விமானங்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளதால், விமான எரிபொருள் செலவு மற்றும் இன்சூரன்ஸ் கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன. பொதுவான இயல்பான காலகட்டத்தில் லண்டன் மற்றும் மும்பை இடையிலான ஒருவழி பயணக் கட்டணம் 20,000 முதல் 40,000 ரூபாய் வரை மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது நிலவும் அசாதாரண சூழலால், ஐரோப்பிய விமான நிறுவனங்கள் ஒருவழி பயணத்திற்கு 2.9 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கின்றன. பிசினஸ் கிளாஸ் டிக்கெட் விலை 9 லட்சம் ரூபாய் என்ற உச்சத்தை தொட்டுள்ளது. டெல்லியில் இருந்து லண்டன் செல்வதற்கான நேரடி விமானங்கள் வரும் 9ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒரு சில தனியார் விமானங்கள் 7.6 லட்சம் முதல் 9.1 லட்சம் ரூபாய் வரை கட்டணத்தை உயர்த்தியுள்ளன. ஐதராபாத் நகரிலிருந்து லண்டன் செல்ல 65,000 முதல் 90,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு வரும் சர்வதேச சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு 11 சதவீதம் முதல் 27 சதவீதம் வரை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விமான போக்குவரத்து துறை வல்லுநர்கள் கூறுகையில் ‘தற்போது ஏற்பட்டுள்ள வான்வெளி கட்டுப்பாடுகளால் விமானங்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் எரிபொருள் செலவு அதிகரித்துள்ளதால் டிக்கெட் விலையை 1,000 சதவீதம் வரை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் இந்தியாவின் உள்நாட்டு விமான கட்டணங்களும் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்துள்ளனர்.
இந்த பதற்றமான சூழலைத் தொடர்ந்து, இன்றைய நிலவரப்படி இந்திய விமானங்கள் 1,221 மற்றும் வெளிநாட்டு விமானங்கள் 388 என மொத்தம் 1,609 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் இந்திய நிறுவனங்கள் சார்பில் 24 விமானங்களும், எமிரேட்ஸ் மற்றும் எதிஹாட் நிறுவனங்கள் சார்பில் 9 விமானங்களும் இயக்கப்பட்டன. இன்று இண்டிகோ நிறுவனம் 30 மற்றும் ஏர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் 23 என மொத்தம் 58 விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளன. தற்போதைய சூழலில் வளைகுடா நாடுகளுக்கான விமான போக்குவரத்து குறிப்பிட்ட வான்வெளிகளை தவிர்த்து மாற்று பாதையில் இயக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவுவது குறித்து ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பயணிகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து சர்வதேச வான்வெளி சூழலை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சிக்கித் தவிக்கும் பயணிகளுக்காக கூடுதல் விமானங்களை இயக்கவும், வெளிநாட்டு தூதரகங்களுடன் இணைந்து செயல்படவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான டிக்கெட் கட்டணம் உயராமல் இருக்க விமான நிறுவனங்களுடன் ஆலோசித்து வருகிறோம். பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்னதாக அதிகாரப்பூர்வ தகவல்களை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
