×

ரூ.10.38 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 2 “தோழி” விடுதிக் கட்டடங்கள், அரசினர் குழந்தைகள் இல்லத்தில் ரூ.7 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார் முதலமைச்சர்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (4.03.2026) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், சிவகங்கை மற்றும் தேனி ஆகிய இடங்களில் 10.38 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பணிபுரியும் மகளிருக்கான 2 “தோழி” விடுதிக் கட்டடங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், தட்டப்பாறை அரசினர் குழந்தைகள் இல்லத்தில் 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில் இதுவரை சென்னை, திருவள்ளூர், கோயம்புத்தூர், செங்கல்பட்டு, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், வேலூர், சேலம், விழுப்புரம், திருநெல்வேலி, பெரம்பலூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, மதுரை, தருமபுரி, கடலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 19 மாவட்டங்களில் 23 தோழி விடுதிகள் நிறுவப்பட்டு, 2,100 பணிபுரியும் மகளிர் பயனடையும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, பிற மாவட்டங்களில் பணிபுரியும் மகளிர் விடுதிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு, மேலும், 22 புதிய ”தோழி” விடுதிகளை 220.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் மூலம் 2540 மகளிர் தங்குவதற்கான கட்டுமானப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைப்பெற்று வருகின்றன. இன்றையதினம் சிவகங்கை மற்றும் தேனி ஆகிய இடங்களில் 10 கோடியே 38 இலட்சம் ரூபாய் செலவில் 100 மகளிர் தங்கும் வகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2 ”தோழி” விடுதிக் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

மகளிரின் பாதுகாப்பான, வசதியான தங்குமிடங்கள் தேவைகளை கருத்தில் கொண்டு, பணிபுரியும் பெண்கள் மட்டுமல்லாது பயிற்சி, உயர்கல்வி, நேர்காணல் போன்ற தேவைகளுக்காக நகரங்களுக்கு இடம் பெயரும் அனைத்து மகளிரின் தேவைகளையும் கருத்தில் கொண்டு குறுகிய கால தங்கும் வசதியையும் பயன்படுத்திகொள்ளும் வகையில் இவ்விடுதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்விடுதிகளில் பயோமெட்ரிக் உள் நுழைவு, 24×7 பாதுகாப்பு வசதி, Wi-Fi வசதி, சிசிடிவி வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஆரோக்கியமான உணவு, பகல் நேர குழந்தைகள் பராமரிப்பு வசதி, சுடுநீர் வசதி, சலவை இயந்திரம், இஸ்திரி வசதி, வாகன நிறுத்துமிடம் மற்றும் பொழுதுபோக்கு அறை போன்ற வசதிகள் குறைந்த வாடகையில் வழங்கப்பட்டு வருகின்றன.

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் பல்வேறு குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் கட்டட வசதிகளை மேம்படுத்துவதற்கும், புதிய கட்டடங்கள் கட்டுவதற்கும், அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது, தூத்துக்குடி மாவட்டம், தட்டப்பாறையில் உள்ள சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு 1649 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள தரை மற்றும் முதல் தளம் கொண்ட புதிய கட்டடம் மற்றும் 592 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள பூப்பந்து உள்விளையாட்டு அரங்கம் ஆகிய கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். குழந்தைகள் இல்ல கட்டடத்தில் சுமார் 100 சிறுவர்கள் தங்கும் வசதிகளுடன் அறைகள், மருத்துவ சிகிச்சை அறை, சமையல் அறை, உணவுக்கூடம், ஆற்றுப்படுத்துனர் அறை, பல்நோக்கு கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை முதன்மை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை இயக்குநர் (மு.கூ.பொ.) ஷில்பா பிரபாகர் சதீஷ், தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சரண்யா அறி, மற்றும் தலைமை செயல் அலுவலர் பவன் கைபா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,State Children's Home ,Chennai ,Tamil Nadu ,K. STALIN ,SECRETARIAT ,SOCIAL WELFARE AND WOMEN'S RIGHTS ,SIVAGANGA ,
× RELATED தமிழ்நாட்டு கோயில் சிலை இங்கிலாந்தில் மீட்பு