தெஹ்ரான்: ஈரானின் புதிய உச்ச தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் முஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டு தாக்குதலைத் தொடர்ந்து அந்நாடு அண்டை நாடுகளான வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் 5-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. இஸ்ரேல் – அமெரிக்கா கூட்டு ராணுவத்தின் சரமாரி தாக்குதலுக்கு அந்த நாட்டின் உச்சபட்ச தலைவர் காமேனி, பாதுகாப்புத்துறை மந்திரி அஜீஸ் நசீர்சாதே, ஈரான் புரட்சிக்கர ராணுவப்படை தளபதிகள் முகமது பக்பூர், செய்யது மஜித் மவுசவி, தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் அலி ஷம்கானி உள்ளிட்ட 13 உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கூண்டோடு படுகொலை செய்யப்பட்டனர்.
டிரம்ப் கூறியபடி கமேனியை கொன்று விட்டாலும், ஈரான் மீதான தாக்குதல் இன்னும் ஒரு வாரத்திற்கு தொடரும் என்று அமெரிக்கா அறிவித்தது. ஈரானின் இடைக்கால ஆட்சியாளராக அயதுல்லா அலிரேசா அராபி நியமிக்கப்பட்டார். ஈரானின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி புதிய தலைவர் தேர்வு செய்யும் வரை, இவரது தலைமையிலான கவுன்சில், நாட்டை வழிநடத்தும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அயதுல்லா கமேனியின் மகன் முஜ்தபா ஈரான் புதிய உச்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஈரான் நாட்டின் ஊடகங்கள் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது.
56 வயதான மௌஜ்தபா, ஈரானை வழிநடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் அலி காமேனியின் இரண்டாவது மகன் ஆவார். நீண்டகாலமாகவே கமேனியின் வாரிசாக இவர் கருதப்பட்ட வந்த சூழலில் அவரது நியமனம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது
