போர் சூழல் காரணமாக வான்வழி மூடல் துபாய் விமானம் பாதியில் சென்னையில் தரையிறங்கியது: பயணிகள் அவதி

சென்னை: போர் சூழல் காரணமாக வான்வழி மூடப்பட்டதால் சென்னையில் இருந்து துபாய் புறப்பட்டு சென்ற விமானம் மீண்டும் சென்னையில் தரையிறங்கியதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இஸ்ரேல், அமெரிக்கா – ஈரான் நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக, கடந்த சனிக்கிழமை முதல் ஐக்கிய அரபு நாடுகள், வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் இடையே விமான சேவைகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை விமான நிலையத்திலும் கடந்த மூன்று நாட்களாக விமான சேவைகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு 217 பயணிகளுடன் துபாயிலிருந்து புறப்பட்டு, நேற்று அதிகாலை 2.15 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்ல கடந்த 3 நாட்களாக காத்திருந்த பயணிகள் எமிரேட்ஸ் விமானத்தில் துபாய செல்ல தயாராகினர். 36 இந்திய பயணிகள், 12 வெளிநாட்டு பயணிகள் என மொத்தம் 48 பயணிகள், விமான ஊழியர்கள் 12 பேர் என 60 பேருடன், எமிரேட்ஸ் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை 3.53 மணியளவில் சென்னையில் இருந்து துபாய் புறப்பட்டு சென்றது.

விமானம் மும்பையை கடந்து, அரபிக் கடல் பகுதியில் சுமார் 38 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்தபோது, போர் சுழல் மீண்டும் அதிகரித்துள்ளதால், துபாய் வான்வழி மூடப்பட்டுள்ளதாக, விமானிக்கு அவசர தகவல் வந்தது. உடனடியாக, விமானிகள் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு, விமானத்தை மீண்டும் சென்னைக்கு திருப்பிக் கொண்டு வந்து தரையை இறக்குவதற்கு அனுமதி கேட்டனர். சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.

இதையடுத்து, எமிரேட்ஸ் விமானம் மீண்டும் சென்னைக்கு திரும்பியது. நேற்று காலை 7.20 மணியளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும், விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு, சென்னை நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். துபாயில் நிலைமை சீரடைந்து வான்வழிப் பாதை மீண்டும் திறக்கப்பட்டதும், எமிரேட்ஸ் விமானம் மீண்டும் சென்னையில் இருந்து துபாய் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விமான சேவை பாதிப்பால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Related Stories: