ஊழல், அதிகார துஷ்பிரயோகம், கொள்ளைப்புறமாக ஆட்கள் நியமனம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பதவியிலிருந்து இளங்கோவன் நீக்கம்

புதுச்சேரி, மார்ச் 4: ஊழல், அதிகார துஷ்பிரயோகம், கொள்ளைப்புறமாக ஆட்களை நியமித்தது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் காரணமாக, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பதவியிலிருந்து இளங்கோவன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் இயக்குநராக செயல்பட்டு வந்த இளங்கோவன் மீது பல்வேறு புகார்கள் கவர்னருக்கு சென்றது. இதையடுத்து, அவர் கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு புதிய இயக்குநராக அர்ஜூன் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். அதே சமயம், புகாரில் சிக்கிய இளங்கோவனுக்கு புதிய பொறுப்புகள் எதுவும் வழங்காமல் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார்.

மூன்று மாதங்களுக்கு மேல் எந்த பொறுப்பும் ஒதுக்கப்படாத நிலையில் அரசியல் அழுத்தம் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக இளங்கோவன் நியமிக்கப்பட்டார். மேலும், அவருக்கு காதி மற்றும் கதர் கிராம தொழில் வாரிய தலைமை செயலதிகாரி பொறுப்பும் வழங்கப்பட்டது. இவர் கூட்டுறவு சங்க பதிவாளர் பதவிக்கு வந்த 3 மாதங்கள் கூட முழுமை பெறவில்லை. அதற்குள் இவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தது. குறிப்பாக, கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு சார்பு நிறுவனங்களான கான்பெட், அமுதசுரபி, கூட்டுறவு நியாய விலைக்கடை சங்கம் ஆகியவற்றுக்கு நிர்வாகிகளை நியமிக்காமல், அவரையே நிர்வாகியாக நியமித்து கொண்டு அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார். மேலும், தமிழகத்தில் பணிபுரியும் அவரது குடும்பத்தினர் வேலைக்கு சென்றுவர புதுச்சேரி அரசின் காரை வழங்கியதாகவும், கொள்ளைப்புறமாக 15க்கும் மேற்பட்டோரிடம் பணம் பெற்றுக் கொண்டு கூட்டுறவு சங்கங்களில் ஆட்களை வேலைக்கு நியமித்தாகவும் கூறப்படுகிறது.

மேலும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிடம் இருந்து வரும் கோப்புகளுக்கு அனுமதி அளிப்பதற்கும், கூட்டுறவு சங்கங்களுக்கு கடன் வழங்குவதற்கும் கையூட்டு பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான புகார்கள் கவர்னர் மாளிகையில் குவிந்தனர். அதே சமயம், சட்டமன்ற தேர்தல் வருவதையொட்டி சில அரசியல் கட்சி பிரமுகர்களிடம் மறைமுகமாக டீல் பேசியதாகவும், இதுதொடர்பாக ஆடியோ பதிவு தேர்தல் துறைக்கும் சென்றுள்ளது. பதவிக்கு வந்த கடந்த 3 மாதங்களாக இளங்கோவன் மீது ஆதாரங்களுடன் பல்வேறு புகார்கள் சென்றதால், உடனே அவரை பணியிலிருந்து நீக்க கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவிட்டார். அதன்பேரில் அவர் கூட்டுறவு சங்க பதிவாளர் பதவிலிருந்து நேற்று அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக உத்தரவை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் சார்பு செயலர் முருகேசன் பிறப்பித்துள்ளார்.

Related Stories: