திருத்தணி, மார்ச் 4: முருகப் பெருமானை தரிசிக்க செவ்வாய்க்கிழமை உகந்த நாள் என்பதால், திருத்தணி முருகன் கோயிலில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. காலை மூலவருக்கு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் சாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, மதியம் சந்திர கிரகணத்தையொட்டி பல்வேறு கோயில்களில் நடை அடைக்கப்பட்டது. இருப்பினும், திருத்தணி முருகன் கோயிலில் மட்டும் வழக்கம் போல் கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் காலை முதல் இரவு 9 மணி வரை வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
