கர்ப்பப்பை வாய் புற்றுநோயை முழுமையாக தடுக்க முடியும்!

நன்றி குங்குமம் தோழி

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். பாதித்தாலும் குணப்படுத்தக்கூடிய நோயாகும். இருப்பினும், அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடியது. மேலும், பெண்களை பெரிதும் அச்சுறுத்தும் நோயாக இன்று இது மாறிஉள்ளது என்கிறார் மகளிர் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் குமார் குபாலா. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.2 லட்சத்திற்கு அதிகமான பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் 77,000க்கும் மேற்பட்ட பெண்கள் இந்நோயால் உயிரிழக்கின்றனர். பெண்களை தாக்கும் புற்றுநோய்களில் இது இரண்டாவது இடத்தில் உள்ளது. குறிப்பாக, வாழ்க்கையின் மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கும் பெண்களையே இந்நோய் அதிகம் பாதிக்கிறது. தடுப்பூசி மற்றும் மருத்துவரின் ஆலோசனையை சரியாக பின்பற்றினால் இந்த நோயின் தாக்கத்தில் இருந்து இளைய தலைமுறையினரை கண்டிப்பாக மீட்க முடியும்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு முக்கியக் காரணம், HPV எனப்படும் ஒரு வகை வைரஸ். இந்த வைரஸ் தொற்று பெரும்பாலும் பாலியல் ரீதியான தொடர்புகள் மூலம் பரவுகிறது. இந்தியாவில் ஏற்படும் 70% கர்ப்பப்பை வாய் புற்றுநோய்களுக்கு, HPV 16 மற்றும் 18 என இரண்டு வைரஸ்கள் காரணமாக அமைகிறது. ஒருவருக்கு HPV தொற்று ஏற்பட்டு அது புற்றுநோயாக மாறுவதற்கு, பொதுவாக 10 முதல் 15 ஆண்டுகள் வரையாகும். நோய் முற்றி உயிருக்கு ஆபத்தான நிலையை அடைவதற்கு முன்பே, அதைத் தடுத்து நிறுத்த முடியும்.கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு

இந்தியாவில் மிகவும் குறைவு. முக்கியமாக பாலியல் ஆரோக்கியம் குறித்து சமூகத்தில் நிலவும் தயக்கத்தினால், HPV தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும் தடுப்பூசியினை போட்டுக்கொள்ள தவிர்க்கிறார்கள். இந்தத் தடுப்பூசி புற்றுநோயை தடுப்பதற்கான தீர்வு தானே தவிர, பாலியல் நடவடிக்கை தொடர்பானது அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நிலை மாற பள்ளிகள், கல்லூரிகள், சமூகங்கள் மற்றும் வீடுகளில் முறையான கல்வி அவசியம். HPV வைரஸ் யாரை வேண்டுமானாலும் பாதிக்கும் என்பதையும், வருமுன் காப்பதே உயிரைக் காக்கும் என்பதையும் இளைய தலைமுறையினர் புரிந்துகொள்ள வேண்டும்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுக்க மருத்துவ துறையில் HPV தடுப்பூசி பெண்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம். 9 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு இத்தடுப்பூசியை செலுத்தினால், 90% வரை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். தேசிய தடுப்பூசித் திட்டங்களில் HPV தடுப்பூசியை இணைத்து, பள்ளிகள் மூலமாகத் தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் நாம் முன்னெடுத்து வைத்துள்ளோம். இருப்பினும் தவறான தகவல்கள், தடுப்பூசியின் விலை, கலாச்சார ரீதியான தயக்கம் போன்ற காரணத்தால், தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

மருத்துவ நிபுணர்கள் பெண் மற்றும் ஆண் குழந்தைகள் இருவருக்கும் தடுப்பூசி போடுவதை ஒரு இயல்பான விஷயமாக மாற்றினால்தான் எதிர்காலத்தில் புற்றுநோய் அபாயத்தை குறைக்க முடியும்.புற்றுநோய் பாதிப்பினை கண்டறிய பேப் ஸ்மியர், HPV DNA மற்றும் VIA (visual inspection with acetic acid) பரிசோதனைகள் மூலம் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் முன்பே கண்டறியலாம். மருந்து மற்றும் பரிசோதனைகளால் இந்த நோயினை தடுக்க முடிந்தாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையினை நாம் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும். இதன் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை அரிதான நோயாக மாற்ற முடியும்” என்று ஆலோசனை அளித்தார் டாக்டர் குமார் குபாலா.

தொகுப்பு: நிஷா