சேலம், மார்ச் 2: சேலம் மாவட்டத்தில் நடந்த கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற 1,291 மாணவ, மாணவிகளுக்கு 3 மண்டலங்களாக பிரித்து பரிசுகள் வழங்கப்பட்டன.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளின் கலைத்திறன்களை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் பல்வேறு தலைப்புகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படுகிறது. இதில் மாநில போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள், வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர். அதன்படி, நடப்பு 2025-2026ம் கல்வியாண்டிற்கான போட்டிகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியாகவும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தனியாகவும் என, வகுப்புகளின் அடிப்படையில் 5 பிரிவுகளில் பள்ளி, வட்டாரம் மற்றும் மாவட்ட மற்றும் மாநில அளவில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த 219 மாணவர்களும், உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 215 மாணவர்களும் என மொத்தம் 434 பேர் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். தொடர்ந்து சேலம், கரூர், கிருஷ்ணகிரி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில், மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னையில் நடந்த விழாவில் பரிசளிக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க உத்தவிடப்பட்டது. சேலம் மாவட்டத்தில் நடந்த கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற 1,291 மாணவ, மாணவிகளுக்கு 3 மண்டலங்களாக பிரித்து பரிசுகள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழ்நாட்டின் தொன்மை, சிறப்பு, பாரம்பரியம், நாகரீகம், பண்பாடு ஆகியவற்றை, பள்ளி மாணவர்களின் தெரிந்து கொள்ளும் வகையில், கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு பல்வேறு தலைப்புகளில், கவின் கலை, நுண்கலை, இசை-வாய்ப்பாட்டு, கருவி இசைகளில் தோல் கருவி, துளை காற்று கருவி, தந்திக்கருவிகள், நடனம் மற்றும் நாடகம் என பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவில் நடந்த போட்டிகளுக்கு சென்றனர். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, நடப்பாண்டு பள்ளி அளவிலான போட்டிகளில் 5.02 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற 25,037 பேர் வட்டார அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர். தொடர்ந்து, 4,232 பேர் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொண்டனர்.
இதில், அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த 234 பேர், உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 219 பேர் என மொத்தம் 453 பேர் முதலிடம் பிடித்தனர். இதே போல், 434 பேர் இரண்டாம் இடமும், 404 பேர் மூன்றாம் இடமும் பிடித்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போது, மாவட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 1,291 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. சேலம் மரவனேரியில் நடந்த நிகழ்ச்சியில், சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட 7 வட்டாரங்களைச் சேர்ந்த 680 மாணவ, மாணவிகளுக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் முரளி, பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதே போல், ஆத்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட 6 வட்டாரங்களைச் சேர்ந்த 301 மாணவர்களுக்கு தேவியாக்குறிச்சி தனியார் கல்லூரியிலும், சங்ககிரி மண்டலத்திற்கு உட்பட்ட 8 வட்டாரங்களைச் சேர்ந்த 310 மாணவர்களுக்கு, தாரமங்கலம் தனியார் பள்ளியிலும் பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
