சென்னை: சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி பகுதிகளில் ரூ.152.45 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 852 குடியிருப்புகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொய்யாதோப்பு திட்டப்பகுதியில் கலைஞரால் 1973ம் ஆண்டு தரை மற்றும் 4 தளங்களுடன் தலா 326 சதுர அடியில் கட்டப்பட்ட 302 குடியிருப்புகளும், காக்ஸ் குடியிருப்பு திட்டப்பகுதியில் 1982ம் ஆண்டு தரை மற்றும் 2 தளங்களுடன் தலா 240 சதுர அடியில் கட்டப்பட்ட 84 குடியிருப்புகளும், நாவலர் நெடுஞ்செழியன் நகர் சிந்தாதிரிப்பேட்டை திட்டப்பகுதியில் 1979ம் ஆண்டு தரை மற்றும் 3 தளங்களுடன் 232 சதுர அடியில் கட்டப்பட்ட 392 குடியிருப்புகளும் சிதிலமடைந்த நிலையில் இருந்தன.
இந்த குடியிருப்புகள் அகற்றப்பட்ட நிலையில் கடந்த 2023ம் ஆண்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 3 திட்டப்பகுதிகளுக்கும் புதிய குடியிருப்புகள் கட்ட அடிக்கல் நாட்டினார். அதன் அடிப்படையில் கொய்யாத்தோப்பு திட்டப்பகுதியில் தரை மற்றும் 5 தளங்களுடன் ரூ.61.20 கோடி மதிப்பீட்டில் 324 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளும், காக்ஸ் குடியிருப்பு திட்டப்பகுதியில் தரை மற்றும் 5 தளங்களுடன் ரூ.14.20 கோடி மதிப்பீட்டில் 78 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளும், நாவலர் நெடுஞ்செழியன் நகர் சிந்தாதிரிப்பேட்டை திட்டப்பகுதியில் தரை மற்றும் 5 தளங்களுடன் ரூ.77.05 கோடி மதிப்பீட்டில் 450 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளும் என மொத்தம் 3 திட்டப்பகுதிகளில் ரூ.152.45 கோடி செலவில் கட்டும் பணிகள் முடிவுற்றன.
இந்த புதிய குடியிருப்புகள், ஒவ்வொன்றும் தலா 400 சதுர அடி பரப்பளவுடன், ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. மேலும், அனைத்து குடியிருப்பு வளாகங்களும், தார் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவு நீரேற்று வசதி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொய்யாத்தோப்பு, காக்ஸ் குடியிருப்பு, நாவலர் நெடுஞ்செழியன் நகர் சிந்தாதிரிப்பேட்டை ஆகிய திட்டப் பகுதிகளில் மொத்தம் ரூ.152.45 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 852 குடியிருப்புகளை திறந்து வைத்து, குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
தொடர்ந்து சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிந்தாதிரிப்பேட்டை திருவள்ளுவர் நகர் பகுதி மக்களுக்கு வீடுகள் வழங்க ரூ.73.50 கோடி மதிப்பீட்டில் 377 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுநாள் வரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 196 திட்டப் பகுதிகளில் 68,759 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடித்து, திறந்து வைக்கப்பட்டு வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கும், குடிசை பகுதிகளில் வாழும் மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி.சிங், மண்டலக்குழு தலைவர் மதன்மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
